மும்பை இந்தியன்ஸ்தான் என் ஆசை: ஜத்ரன்!

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஆசை என ஆஃப்கானிஸ்தான் வீரர் ஷபூர் ஜத்ரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.


டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்தைச் சமீபத்தில் பெற்ற ஆஃப்கானிஸ்தான், இந்தியாவில் இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜூன் 14ம் தேதி துவங்க உள்ளது.

இந்த நிலையில், அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள ஷபூர் ஜத்ரன் இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் பத்திரிகைக்குப் பேட்டியளித்தார். அதில், “ஒவ்வோர் இளம் கிரிக்கெட் வீரருக்கும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்து விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும். எனக்கும் அதே கனவு உள்ளது. குறிப்பாக அடுத்த ஐபிஎல் மற்றும் பிக் பாஸ் தொடர்களில் இடம்பிடிப்பேன் எனும் நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

மேலும், ஐபிஎல்லில் எந்த அணியில் விளையாட ஆசை எனக்கேட்டபோது, ஐபிஎல் தொடரில் “மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை” எனத் தெரிவித்துள்ளார். ஜத்ரன் ஏற்கனவே பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குல்னா ராயல்ஸ் பெங்கால் அணியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.