காணாமல் போகும் விவசாய நிலங்கள்!

இந்திய விவசாயிகளின் கையிருப்பில் இருக்கும் நிலங்களின் சராசரி அளவு குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியான நபார்டு, இதுதொடர்பான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டுக்கான இந்த ஆய்வில் இந்திய விவசாயிகளிடம் கையிருப்பில் உள்ள நிலத்தின் அளவு 1.1 ஹெக்டேராகக் குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகளிடம் கையிருப்பில் இருந்த சராசரி நிலத்தின் அளவு 1.16 ஹெக்டேராக இருந்தது. மேலும், இப்போது மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளிடம் 1 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் மட்டுமே கையிருப்பில் இருப்பதாகத் தற்போதைய நபார்டு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

37 சதவிகிதம் அளவிலான விவசாயக் குடும்பங்களிடம் 0.4 ஹெக்டேருக்குக் குறைவான நிலமும், 30 சதவிகிதத்தினரிடம் 0.41 ஹெக்டேர் முதல் 1 ஹெக்டேர் வரையிலான நிலமும் இருக்கிறது. அதேபோல, 13 சதவிகித விவசாயிகளிடம் மட்டுமே 2 ஹெக்டேருக்கு அதிகமான விவசாய நிலம் இருக்கிறது. விவசாயத்துக்குத் தேவையான உபகரணங்களைப் பொறுத்தவரையில், 5.2 சதவிகித விவசாயக் குடும்பத்திடம் மட்டுமே டிராக்டர் இருக்கிறது. 1.8 சதவிகித விவசாயிகளிடம் பவர் டிரில்லர் கருவிகளும், நீர்ப் பாசன வசதிக்கான கருவிகள் 1.6 சதவிகிதத்தினரிடமும், நீர் தெளிப்பான் கருவிகள் 0.8 சதவிகிதத்தினரிடமும் மட்டுமே இருக்கின்றன.

மாநில வாரியாகப் பார்த்தோமேயானால், நாகாலாந்து மாநில விவசாயிகளிடம் சராசரியாக 2.1 ஹெக்டேர் நிலமும், ராஜஸ்தான் மாநிலத்தில் 1.9 ஹெக்டேர் நிலமும், ஹரியானா மாநிலத்தில் 1.7 ஹெக்டேர் நிலமும் விவசாயிகள் கையிருப்பில் இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.