நான் இதற்குத் தகுதியானவளா?

நான் பெரியதாக ஏதும் செய்யாமல் என் மீது இவ்வளவு அன்பு
வைத்திருக்கிறார்கள். அதற்கு நான் தகுதியானவள் தானா என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.
நடிகை ஓவியா திரைப்படங்களில் நடித்திருந்த போதுகூட அவ்வளவாகப் பிரபலமாகாத நபராகவே இருந்தார். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பகுதியில் கலந்து கொண்ட பின்னர் உலக பிரபலமானார் ஓவியா. இதனையடுத்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். அதனோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் நகைக் கடை ஒன்று திறப்பதற்காக சென்ற இவருக்கு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியா ரசிகர்களிடமும், அங்குள்ள ஊடகங்களிடமும் கலந்துரையாடல் நிகழ்த்தியுள்ளார். அப்போது பேசிய ஓவியா, “தமிழில் பேச கொஞ்சம் கொஞ்சம் இலக்கண பிழை இருக்கிறது. அதை தற்போது சரிப்படுத்துவதற்கு கற்று வருகிறேன். பொதுவாக நடிப்பதற்கு விருது கொடுப்பார்கள். ஆனால் நான் ஒன்றுமே பண்ணாமல் இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு இதற்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை, இருந்தாலும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.
வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை. முன்பைவிட இப்போது எங்குச் சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு விடுகிறார்கள். இதற்கு முன் அவ்வாறாக இல்லை. இப்போது இலங்கைக்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். உங்களின் அன்பிற்கும், ஆதரவுக்கும் எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டவளாக இருக்கிறேன். இனிமேலும் இருப்பேன். இன்று நான் உலகம் முழுவதும் பேசப்படுபவளாக இருப்பதற்குக் காரணம் உங்களின் ஆதரவும், அன்பு மட்டுமே” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.