‘பேட்ட’யில் இணைந்த கம்மட்டிபாடம் நடிகர்!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், குரு சோமசுந்தரம் என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களம் இறக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
அந்த வகையில் மலையாளத்தில் இருந்து மணிகண்ட ஆச்சாரி என்பவரை இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அழைத்து வந்துள்ளார் இயக்குநர். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகிப் பாராட்டு பெற்ற படம் கம்மட்டிப்பாடம். இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த மணிகண்ட ஆச்சாரி. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கத்தில் உருவான இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது லக்னோவில் நடைபெற்றுவரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மணிகண்டன். வெள்ளப் பாதிப்பின்போது கேரளாவிற்கு உதவி செய்த விஜய்சேதுபதிக்கு கேரள மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக அதில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.