இந்த முறை இந்தியாவில் ‘விசில்’ அடிக்க முடியாது?
2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடந்துவருகின்றன. ஆனால், அடுத்த ஆண்டுக்கான போட்டிகள் நடக்க வேண்டிய அதே நேரத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே 2009 ஆண்டு ஐபிஎல் போட்டியும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் வந்ததால் ஐபிஎல் போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டன. அதேபோல் 2014ஆம் ஆண்டும் பாதிப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தன. எனவே இந்த முறையும் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
அதேநேரம், தேர்தல் கமிஷன் அறிவிக்கும் தேர்தல் தேதியைப் பொறுத்தே ஐபிஎல் இடமாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனும் முடிவில் உள்ளது ஐபிஎல் நிர்வாகம். வழக்கமாக ஏப்ரல் முதல்வாரத்தில்தான் ஐபிஎல் நடைபெறும். ஆனால் இந்த சீசன் மார்ச் மாதத்தின் இறுதியில் நடக்கவிருக்கிறது.
இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் பட்சத்தில் போட்டிகளை எங்கு நடத்தலாம் எனவும் ஆலோசனையில் இறங்கியிருக்கிறது கிரிக்கெட் நிர்வாகம். அதன்படி தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் தெரிவில் உள்ளன. போதிய களச் சூழல் மற்றும் பாதுகாப்புகளுடன் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவில் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த அனுபவம் இருப்பதால் இந்த தெரிவுகளில் தென் ஆப்பிரிக்காவுக்கே முன்னுரிமை கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
#india #tamilnews
#india #tamilnews
கருத்துகள் இல்லை