இன்று ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணம் பற்றி ஓர் அலசல் !!

உலக கிரிக்கெட் அரசாங்கில் ஆசிய நாடுகளுக்கே உரித்தான ஆசிய கிண்ணப் போட்டியின் 14 ஆவது ஆசிய கிண்ணத்  தொடர்
இன்று 15 ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம்  திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை பொருத்தவரையில் இதுவரை இரண்டு ஆசிய கிண்ணப் போட்டிகளை நடத்தியுள்ளது. அதன்படி முதலாவது ஆசிய கிண்ணத் தொடரை 1984 ஆம் ஆண்டிலும் ஐந்தாவது ஆசியக் கிண்ணத் தொடரை 1985 ஆம் ஆண்டிலும் நடத்தியிருந்தது.
அத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ள போட்டியை நடத்துவதன் மூலம் மொத்தமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் மூன்று ஆசியக் கிண்ணத் தொடர்களை நடத்திய பெருமையை பதிவு செய்யும்.
அந்த வகையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் ஆரம்பமாகும் ஆசிய கிண்ணப் போட்டிகளில் மொத்தமாக 13 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
14 ஆவது தடவையாக இன்று ஆரம்பாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் ஐ.சி.சி.யின் முழு அங்கத்துவ நாடுகளான ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா, சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான், அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை, மெஸ்ரபி மொட்ராஸா தலைமையிலான பங்களாதேஷ், அஸ்கார் ஆப்கான் தலைமையிலான ஆப்பாகிஸ்தானும் மற்றும்  ஆசியக் கிண்ணத்திற்கான தெரிவுப் போட்டிகளில் வெற்றிபெற்ற அங்கத்துவ நாடான அனுஸ்மன் ராத் தல‍ைமையிலான ஹொங்கொங் அணியுமாக மொத்தம் 6 அணிகள் பங்கு கொள்கின்றன.
இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் குழு ‘A’ யிலும், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குழு ‘B’ யிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாளை  15 ஆம் திகதி ஆரம்பமாகும் குழுநிலைப் போட்டிகள் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றான ‘சுப்பர் -4’ சுற்றுக்கு முன்னேறும்.
‘சுப்பர் -4’ சுற்றில் வெற்றிபெறும் அணிகள் செப்டெம்பர் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
இதுவரை நடந்து முடிந்த ஆசியக் கிண்ணத் தொடர் வரலாற்றில் இந்திய அணி ஆறு தடவைகளும் (1984,1988, 1990-91, 1995, 2010, 2016 ) இலங்கை அணி ஐந்து தடவைகளும் (1986, 1997, 2004, 2008, 2014) பாகிஸ்தான் இரண்டு தடவைகளும் (2000, 2012) தொடரை வெற்றிகொண்டு கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.
ஒருநாள் தொடராக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் இலங்கை அணியை பொருத்தவரையில், நீண்ட நட்களுக்குப் பிறகு அனுபவம் நிறைந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இணைக்கப்பட்டுள்ளமை அணிக்கு மிகப் பெரிய பலமாகவுள்ளது.
இந்நிலையில் ஆசிய கிண்ணக் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என தெரிவித்த பாகிஸ்தான் அணியின் தலவைர் சப்ராஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளமானது ஸ்லோ பீட்ச் ஆக இருப்பதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
இம்முறை போட்டித் தொடரின் முதல் போட்டியில் முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை அணியும், இறுதியாக நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.