ஜோதிகா படத்தின் புது விளம்பரம்!

ஜோதிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் 'காற்றின் மொழி' படத்தின் சார்பாகப் பாடல் எழுதும் போட்டி நடத்தப்படுவதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’
போன்ற திரைப்படங்களின் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் ஜோதிகா நடிப்பில் ‘காற்றின் மொழி’, ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. அடுத்து பெயரிடாத ஒரு படத்திலும் நடிப்பதற்காகத் தயாராகி வருகிறார் ஜோதிகா.
இதற்கிடையே இந்தியில் சூப்பர் ஹிட்டான 'துமாரி சுலு' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான காற்றின் மொழி படக் குழுவினரின் சார்பாகப் பாடல் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இதில் கவிதை எழுதுபவர்கள், திரைப்பாடல் எழுதுபவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். அந்தப் பாடலுக்கான சிச்சுவேஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பப்படும் பாடல்களிலிருந்து இரண்டு சிறந்த பாடல்களைப் படத்தின் பாடலாசிரியர் மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். இவர்களுக்குப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது வெகுமானமும், அங்கீகாரமும் தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி இதற்கான கடைசித் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று படத்தின் டைட்டிலைக் கணிக்க கூறி முன்னதாகவே ஒரு போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக புதுவிதமான முயற்சியில் படத்துக்கான விளம்பரம்செய்து அதை மக்களிடம் கொண்டு செல்கின்ற முயற்சியில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.