நவாஸுதினை இயக்கும் ராஜுமுருகன்

பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவரான நவாஸுதின் சித்திக்கை வைத்து படம் இயக்கவுள்ளார் இயக்குநர் ராஜு முருகன்.
இயக்குநர் ராஜு முருகன் தன்னுடைய எழுத்துக்களிலும் திரைப்படங்களிலும் சமூகப் பிரச்சினைகளையும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும் தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார் . ஜோக்கர் படத்தை அடுத்து, இந்தியா முழுவதும் பயணமாகி எடுக்கப்படும் `ஜிப்ஸி' திரைப்படத்தின் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் அண்மையில் ராஜுமுருகன் மும்பையில் வைத்து பாலிவுட் நடிகர் நவாஸுதீனைச் சந்தித்திருக்கிறார். `ஜோக்கர்' படத்தைப் பார்த்த நவாஸுதீன், `இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.
இது குறித்து ராஜுமுருகனின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, “நவாஸுதின் தென்னிந்தியாவிலிருந்துதான் மிக தைரியமான அரசியல் பேசும் படங்கள் வருகின்றன என்று கூறியுள்ள்ளார். ஜோக்கர் பேசும் அரசியல், அதன் மொழியைத் தாண்டி தன்னை மிகவும் பாதித்ததாகவும் `பீப்பிள் பிரசிடென்ட்' என்ற பெயரில் அதை இந்தியில் பண்ணினால் கலை ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் என்றும் ராஜுமுருகனைப் பாராட்டியிருக்கிறார். இந்த வருடம் தமிழில் `பேட்ட', மற்றும் இரண்டு வெளிநாட்டுப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் அடுத்த ஆண்டு கால்ஷீட் தருவதாகவும் சொல்லியிருக்கிறார்” என்றார்கள்.
ஜீவா, நடாஷா சிங் நடித்து வரும் ஜிப்ஸி படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். இறுதி பத்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன், `யானை டாக்டர்' என்ற ஜெயமோகனின் புகழ்பெற்ற கதை ஒன்றை ராஜுமுருகன் இயக்க உள்ளார். அதற்கான திரைக்கதை பணியை ஜெயமோகனும் ராஜுமுருகனும் இணைந்து ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.