சீமராஜா: ஒரு நாள் மட்டும் அனுமதி!

தமிழ் சினிமாவில் நட்பு, நம்பிக்கை அடிப்படையில் கதாநாயகனை நம்பும் திடீர் தயாரிப்பாளர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த சினிமா துறையும் சில நேரங்களில் பைனான்சியர்களிடம் அவமானப்படுகிறது. பல நேரங்களில் முதலீடு செய்து காத்திருக்கும் திரையரங்கு மற்றும் விநியோகஸ்தர்களை நிம்மதி இழக்கச் செய்து நஷ்டத்தை ஏற்படுத்தியும் விடுகின்றனர்.
அப்படிப்பட்ட நிலையை சீமராஜா தயாரிப்பாளர் ராஜா இன்று உருவாக்கினார் என்கிறது தமிழ் சினிமா வியாபார வட்டாரம்.

சீமராஜா படம் தொடங்கிய அன்றே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. வியாபாரம், விளம்பரம் என அனைத்து விஷயங்களிலும் திட்டமிட்டு செயலாற்றிய 24 AM நிறுவனம் பைனான்சியர் பாக்கியை கிளியர் செய்வதில் மெத்தனமாக இருந்ததால் தமிழ்நாடு முழுவதும் அதிகாலை சிறப்பு காட்சி ரத்தானது.

‘ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது’என்பார்கள் அது சிவகார்த்திகேயனுக்கும் பொருந்தி வருகிறது என்கிறது கோடம்பாக்கம். 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் படத்திற்குத் தொலைக்காட்சி விளம்பரம் 8 கோடி ரூபாய்.

இது சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கும் கேடு விளைவிக்கக் கூடியது என்கிறது தமிழ் சினிமா வட்டாரம். ரஜினி, அஜித், விஜய் படங்களுக்குக் கூட தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு எட்டு கோடி பட்ஜெட் கிடையாது.

சுமார் 30 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படத்திற்கு எட்டு கோடி என்பது அறிவுப்பூர்வமானதல்ல என்கிறார் திரைப்பட விமர்சகர் ராம்.

வியாபார வரம்புக்கு மீறி சீமராஜா படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் சீமராஜா படத்தின் நெகட்டிவ் உரிமையை அடமானமாக வைக்கப்பட்டு வாங்கிய பணத்தை தயாரிப்பாளரால் உரிய நேரத்தில் கொடுக்க முடியவில்லை.

இதனால் படத்தை இன்று காலை ரிலீஸ் செய்வதில் தடை ஏற்பட்டது. தனது கெளரவத்தை காப்பாற்றிக்கொள்ள இப்பிரச்சினையில் தாமதமாக தலையிட்ட சிவகார்த்திகேயன் வெள்ளிக்கிழமை 13 கோடி ரூபாய் பாக்கியை கொடுப்பதற்கு பொறுப்பேற்றுக் கொண்டதால் சீமராஜா படத்தை இன்று ஒரு நாள் மட்டும் திரையிட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார் பைனான்சியர் ஜஸ்வந்த் பண்டாரி. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.