இராணுவத்தினரின் அத்துமீறிய செயற்பாடு!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவியாற்று நீர்த்தேக்க துருசு கதவுகளை இராணுவத்தினர் அத்துமீறி உடைத்து நீரை பயன்படுத்தியதால் சிறுபோக நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அருவித்தோட்டத்திற்கு நேரடியாக நேற்று சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கிறிஸ்தவகுளத்தில் அருவித்தோட்டம் எனும் இடத்தில் அணைக்கட்டொன்று அமைக்கப்பட்டு காலாகாலமாக விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இம்முறை சிறுபோக நெற்செய்கைக்காக 25 ஏக்கர் செய்கை பயிறிடப்பட்டது. தற்போது குடலைப் பருவத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் மாணிக்கம் பண்ணையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற இராணுவத்தினர் துறைசார்ந்த திணைக்களங்களின் அனுமதியின்றி நீர்த்தேக்கத்தின் சுலுசுகளை உடைத்து தமக்கு தேவையான நீரை திறந்து பாய்ச்சியுள்ளார்கள்.

இதனால் விவசாயிகளின் 25 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீரின்மையால் நெல்வயல்கள் கைவிடப்பட்டு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கின்றது.



இதுதொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளரினால் இராணுவத் தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும் நெற்செய்கை கைவிடப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விசேட நஸ்ட ஈட்டுக்கொடுப்பனவை வழங்கவேண்டுமென மாவட்ட செயலாரை கோரியுள்ளதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.