ரவுடிகளை தெறிக்கவிடும் வேலூர் இன்ஸ்பெக்டர் நாகராஜன்!!

வேலூரில், பிற ஸ்டேஷன்களுக்கு முன்மாதிரியாக வடக்கு பொலிஸ் நிலையம் மாறியிருக்கிறது.
அங்கு, பணியாற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜன், குற்றவாளிகளைக் கவனிக்கும் விதமும், வழக்குகளைக் கையாளும் முறையும் ரவுடிகளை அலறவைத்திருக்கிறது.

மதுரை, நெல்லை, தூத்துக்குடி, சென்னையைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலும் அரிவாள் கலாசாரம் தலை தூக்கியிருக்கிறது. குற்றங்களும், குற்றவாளிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன. எப்போதும் ஒருவித பதற்றத்துடன் வாழும் நகரமாக மாறியிருக்கிறது வேலூர். 2018-ம் ஆண்டில், இம்மாவட்டத்தில் மொத்தம் 31,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மணல் குண்டர்கள், ரவுடிகள் உட்பட மொத்தம் 109 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. காவல்துறையும் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்காக, மாவட்டம் முழுவதும் 2,108 சிசிடிவி கேமராக்களை பொருத்திக் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

இது ஒருபுறம் இருக்க ரவுடிகளின் கூட்டாளிகள், சிறுசிறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், வழிப்பறிக் கொள்ளையர்கள், அரசியல் பிரமுகர்களின் அடியாள்கள் ஆகியோரின் அச்சுறுத்தல்கள், வேலூர் நகரில் குறையாமல் இருந்தன. இதற்கு, முடிவு கட்டியுள்ளார் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன். ``வேலூர் சப்-டிவிஷன்களில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்னைகளில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் எண்ட்ரி கொடுத்தாலே போதும், அந்தப் பிரச்னைக்கு அதோடு முற்றுப்புள்ளி தான்’’ என்கிறார்கள் சக போலீஸார். சமீபத்தில், வேலூருக்கு நடிகர் அஜித் வருவதாக, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. அதை நம்பி வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.

நள்ளிரவு வரை, ரசிகர்கள் கலைந்து செல்லாமல் நோயாளிகளுக்குத் தொந்தரவு ஏற்படுத்தி ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் முகாமிட்டிருந்தனர். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டும், ரசிகர்கள் கலைந்து செல்லவில்லை. இன்ஸ்பெக்டர் நாகராஜன் வந்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள், ‘‘இன்ஸ்பெக்டர் நாகராஜன் வரார்டா... ஓடுங்கடா!’’ என்று கூச்சலிட்டு தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். இதேபோல், இன்ஸ்பெக்டர் நாகராஜன், விசாரணை நடத்தும் விதம் தனி ஸ்டைலில் இருப்பதால் நடுநடுங்கிப் போயிருக்கிறார்கள் குற்றவாளிகள். சமீபத்தில், சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரை ஏமாற்றி வேலூருக்கு வரவழைத்த கும்பல், வெளியூருக்கு கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கி லட்சக்கணக்கில் பணம் பறித்தது.

இந்த வழக்கை, வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார், நாகராஜனிடம் ஒப்படைத்தார். ஓரிரு நாள்களில், ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி பணம் பறித்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்தார். இதுபோன்று அனைத்து வழக்குகளையும் துரிதமாக விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதால், பொதுமக்களின் பாராட்டுகளை இன்ஸ்பெக்டர் நாகராஜன் பெற்றுள்ளார். வேலூர் வடக்கு போலீஸ் நிலையமும், ரூ.8 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு மற்ற காவல் நிலையங்களுக்கு முன்மாதிரியாக ‘சீர்மிகு காவல் நிலையமாக’ மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.