போர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்

சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொண்ட பின்னரே இந்த அரசாங்கத்தை மன்னிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வட.மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம் இன்று (சனிக்கிழமை) சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது கடந்தகாலத் தவறுகளை மறந்து செயற்படுவோம் எனக் கூறியிருந்தார்.

அத்துடன், கடந்தகாலத் தவறுகளை மன்னித்து மறந்து விடுங்கள். பழையனவற்றை மறந்து விடுங்கள். உண்மையைக் கண்டறிய முனையாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது அபிவிருத்திகள் எனும் போர்வையில், உங்களுக்குப் பணம் தருகின்றோம், உங்கள் உறுப்பினர்களுக்கு சலுகைகள் தருகின்றோம். உங்கள் பொருளாதார விருத்திக்கு அடி சமைக்கின்றோம். நடந்து போனதை மறந்து விடுங்கள் – மன்னித்து விடுங்கள் என்று தான் கூறுகின்றார்.

இதன் அர்த்தம் என்ன? ஜெனிவாவில் கேள்வி கேட்கப் போகின்றார்கள். நாம் செய்வதாகக் கூறியவற்றை இதுவரை செய்யவில்லை. இப்போது உங்களுக்கு சலுகைகளைக் கொடுக்க எண்ணியுள்ளோம். கட்சி ரீதியாக அதைச் செய்ய எண்ணியுள்ளோம்.

எனவே ஜெனிவாவில் மீண்டும் கால அவகாசம் பெற்றுக் கொடுங்கள் என்று பிரதமர் கூறிச் சென்றுள்ளார். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாகத் தலையசைத்ததைப் பார்த்தால் அதற்கு அவர்கள் தயாராகி விட்டதாகவே தெரிகின்றது.

ஆனால் முதலில் சர்வதேச உதவியுடன் இலங்கையில் போர்க்குற்ற விசாரணையை நடத்தி, இங்கு இடம்பெற்றது இனப்படுகொலை ஆராய்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே மன்னிப்புத் தொடர்பாக நாம் ஆராய முடியும்” என சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.