உதயநிதியின் பேட்ட Vs விஸ்வாசம்!

தமிழ் சினிமா 2019: சறுக்கியதும் சாதித்ததும்: 3

இராமானுஜம்
தமிழ் சினிமா 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 படங்களை வெளியிட்டது. சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவா நடித்த குலேபகாவலி, விமல் நடித்த மன்னர் வகையறா, அனுஷ்கா நடித்த பாகமதி, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகியவை முக்கியமான படங்கள்.




இவற்றில் எந்த படமும் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை பெற்றுத் தரவில்லை. வருடத்தின் தொடக்கமே நஷ்டத்தை சந்தித்தது. இதிலிருந்து வேறுபட்ட வருடமாக 2019 தமிழ் சினிமாவுக்கு அமைந்தது.


பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் குமார் நயன்தாரா நடித்த விஸ்வாசம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் மற்ற முன்னணி நடிகர்கள் படங்கள் பொங்கலுக்கு வெளியிடுவதற்கு திட்டமிடாமல் ஒதுங்கிக் கொண்டனர்.


யாரும் எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது திரையரங்குகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காரணம் 1100 திரைகள் இருக்கக்கூடிய தமிழகத்தில் விஸ்வாசம் மட்டும் வெளிவந்து இருக்குமேயானால் சுமார் 700 திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடும் வாய்ப்பை இழந்து இருக்கும்.


2018 பொங்கல் பண்டிகை அன்று பிரபுதேவா நடித்த குலேபகாவலி படத்தை வெளியிட்ட கே ஜே ஆர் ஸ்டுடியோஸ், இந்த வருடம் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை நயன்தாரா மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி தமிழக திரையரங்கு உரிமையை மொத்தமாக வாங்கியிருந்தனர்.


சன் பிக்சர்ஸின் நேரடி தயாரிப்பான பேட்ட படத்தை திரையிடும் பொறுப்பை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனத்திடம் வழங்கியிருந்தனர். இதனால் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வதில் கடுமையான போட்டி ஏற்பட்டது .


தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஓபனிங் ஹீரோ என்பதில் எப்போதும் முதல் இடம் அஜித்துக்கு உண்டு. ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் ஆகியோருக்கு இரண்டாம் இடம்தான்.


இதற்கு காரணம் அமைப்பு ரீதியாக அஜீத் ரசிகர் மன்றங்கள் இல்லை என்றாலும் அவர் மீது வெறித்தனமான அன்பு கொண்ட ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பரவியுள்ளனர். இதனால் அஜித் படம் திரையிடும் திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட் விலை பற்றி கவலைப்படாமல் திரையரங்குகளை அஜித் ரசிகர்கள் நிரப்பிவிடுவார்கள்.


இதுபோன்ற நிலைமை விஜய், ரஜினி, கமல் ஆகியோருக்கு இல்லை. அதனால் தான் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும் அஜித் குமார் வசூலில் ஓபனிங் ஹீரோவாக இன்று வரை முதலிடத்தில் இருக்கிறார் .


அதனால் விஸ்வாசம் படத்தை திரையிடுவதற்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுத்தன. ரஜினிகாந்த் நடித்த படம் வருகிறது என்றாலே தமிழ் சினிமாவில் வெளியிட திட்டமிட்டிருக்கும் அனைத்து படங்களும் பின்வாங்கிவிடுவது தொடர்கதையாக இருந்து வந்தது.


ஆனால் இந்த வருடம் அந்த தயக்கத்தை, பின் வாங்கலை உடைத்தெறிந்து விஸ்வாசம் பேட்ட ரிலீஸ் ஆகும் ஜனவரி 10 அன்று வெளியானது.
பேட்ட வெளிவருவதால் விஸ்வாசம் படத்தை நான்கு நாட்கள் கடந்து பொங்கல் அன்று அல்லது ஜனவரி 25 அன்று ரிலீஸ் செய்யுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர்


 சத்யஜோதி தியாகராஜன் மற்றும் தமிழக உரிமையை வாங்கிய கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் பொங்கல் வெளியீடு என்று சொல்லி விஸ்வாசம் படத்தின் உரிமைகள் வியாபாரம் செய்யப்பட்டது. தேதி மாற்றம் செய்யப்பட்டால் விலை குறையும் என்பதால் திட்டமிட்ட அடிப்படையில் விசுவாசம் படத்தை ரீலீஸ் செய்வதில் உறுதியாக இருந்தனர்.


பேட்ட படத்தின் பின்னணியில் சன் தொலைக்காட்சி, உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த் என்கிற பிம்பங்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல் இப்படத்தில் பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, திரிஷா கிருஷ்ணன், இயக்குனர் சசிகுமார், சிம்ரன், இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்திருந்தனர். விஸ்வாசம் படத்தை காட்டிலும் பேட்ட படத்துக்கு ஊடகங்களில் ஒத்துழைப்பு அதிகம் இருந்தது.


அஜித், நயன்தாரா என்ற இரண்டு நட்சத்திரங்களை மட்டுமே நம்பி பேட்ட படத்துடன் ஜனவரி 10 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், ஆசியா கண்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், தமிழக அரசியலை தீர்மானிக்க கூடிய வல்லமை படைத்த நடிகர், அரசியலில் இறங்கினால் அடுத்த தமிழக முதல்வர் என்று ஊடகங்களால் மட்டுமே உறுதி செய்யப்பட்டு வந்த ரஜினிகாந்த் படத்தின் வசூலை விஸ்வாசம் முறியடித்ததா?


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.