கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையர்களுக்கு அனுமதியில்லை!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் வருகின்ற 6,7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள திருவிழாவில் பங்கேற்க, இந்தியாவில் இருந்து 3,004 பேர் பதிவு செய்துள்ளனர்.


இந்தியா – இலங்கை இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் 2 நாள் நடைபெறும் திருவிழாவில் இருநாட்டு பக்தர்களும் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டின் திருவிழா வரும் மார்ச் 6 மற்றும் 7ம் திகதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள, ராமேஸ்வரம் பங்குத் தந்தை தேவசகாயத்திற்கு யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெயரத்தினம் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.

இதையேற்று, திருவிழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, பங்குத்தந்தை தேவசகாயம் கூறியதாவது; “2020ம் ஆண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா வரும் 6ம் திகதி பிற்பகல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து திருப்பலிகளும், இரவு தேர்பவனியும் நடைபெறும். மறுநாள் (7ம் திகதி) அதிகாலை சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும். தொடர்ந்து, கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும்.

இந்தியாவில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்காக பக்தர்களை ஏற்றிச் செல்ல 77 விசைப்படகுகளும், 25 நாட்டுப்படகுகளும் அனுமதி பெற்றுள்ளன. இதன்மூலம், 3,004 பயணிகள் செல்வதற்காக தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் தங்களுக்குரிய ஆதார் அடையாள அட்டையையும், காவல் நிலையங்களில் பெறப்பட்ட தடையில்லாச் சான்றிதழையும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவிற்குச் செல்ல அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை” என்றார்.
Blogger இயக்குவது.