பிணைமுறி மோசடியை விசாரிக்க நீதியரசர்கள் குழு!


முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு ஒன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரே கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர், நேற்று இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த இருவருக்கும் எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த மாதம் 5ஆம் திகதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2016ஆம் ஆண்டில் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராகப் பதவி வகித்தபோது, அர்ஜுன் அலோசியஸ் பணிப்பாளராகப் பதவி வகித்த ‘வோல்ட் & ரோ அஸோஸியேட்ஸ்’ நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட, காசோலையைப் பயன்படுத்தி கொள்ளுப்பிட்டி பகுதியில் 11.68 மில்லியன் ரூபா பெறுமதியான வீடொன்றை வாடகைக்குப் பெற்றமை, அதற்கு ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் இருவருக்கும் எதிராக இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.