இலங்கை சேதன விவசாய அபிவிருத்தியில் மும்முரம்!!

 

“சேதன விவசாய அபிவிருத்தியில் ஜனாதிபதியும் நானும் தெளிவான உறுதியோடு உள்ளோம்” – என கெளரவ பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்குச் சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் இன்றியமையாத தேவையாகியுள்ளதுடன்,

அதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்துவது முக்கியமாகும் என்பதனை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

சேதனப் பசளை மற்றும் சேதனப் பயிர்ச்செய்கை தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

விவசாய பெருமக்கள் மத்தியில் இது தொடர்பில் தவறான கருத்து ஏற்படுத்தப்பட்டுள்ளமையால் அவர்களுக்கு விழிப்பூட்டுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் கௌரவ பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகள் மற்றும் ஆலயங்களை மையமாகக் கொண்டு சேதனப் பயிர்ச்செய்கைக்கு பிள்ளைகள் மற்றும் மக்களை பழக்கப்படுத்துவதற்கு துறைசார் அமைச்சுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வருமாறு கௌரவ பிரதமர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சேதனப் பயிர்ச்செய்கையை நாட்டில் விரிவுபடுத்துவதற்கான நிபுணர்களின் ஆதரவிற்குத் தனதும் எனதும் பாராட்டுக்களைத் தெரிவித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள்,

சேதனப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் நான் ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதனையும் நேற்றைய சந்திப்பில் அவர் நினைவூட்டினார்.

முறையான வேலைத்திட்டமொன்றின் மூலம் நாட்டில் ஆரோக்கியமான மக்களை உருவாக்குவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக நம் நாட்டின் பயிர்ச்செய்கை இரசாயன பாவனைக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளமையால்,

மக்களின் ஆரோக்கியம் மோசமடைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய அவர்கள் நேற்றைய சந்திப்பில் தெரிவித்தார்.

பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் காரணமாக,

சேதனப் பயிர்ச்செய்கைக்கு உதவும் நுண்ணுயிர்கள் மற்றும் மண் நாசமாக்கப்பட்டுள்ளதுடன், நீர் மாசு மற்றும் சூழல் மாசும் அதிகரித்துள்ளது.

கணக்காய்வாளர் அறிக்கையின்படி சுமார் 200 நச்சுப் பொருட்கள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுகின்றன.

இவற்றிலிருந்து நிதி சலுகைகள் மற்றும் பிற சலுகைகளைப் பெறும் நபர்கள் சேதனப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டுவதாக வைத்தியர் அனுருத்த பாதெனிய மேலும் கூறினார்.

இரசாயன உர பாவனை காரணமாக விவசாயிகள் ஏழைகளாகி உள்ளதாகவும்,

நாட்டில் சிறுநீரக நோயாளர்கள் மற்றும் புற்று நோயாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த வைத்தியர் அனுருத்த பாதெனி அவர்கள்,

இரசயான பாவனை மற்றும் விஷ உணவு பாவனை காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 புற்றுநோயாளர்கள் மரணிப்பதாகவும் குறிப்பிட்டார்.

சிறுவர்களுக்காக நீரிழிவு சிகிச்சை நிலையங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுதல்,

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாடு,

மற்றும் நிரந்தர உடற்பாதிப்பு உடைய குழந்தைப் பிறப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு, இந்த நிலையே காரணமாகியுள்ளதாக வைத்தியர் அனுருத்த பாதெனிய குறிப்பிட்டார்.

நெல் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான போதியளவு உரம் நாட்டில் காணப்படுவதாகவும், ஆனால் வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அந்த உரத்தை சந்தைக்கு வெளியிடாது போலியான உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளதாக நேற்றைய சந்திப்பிற்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பெரும் போகத்திற்கான சேதனப் பசளையை எவ்வித தட்டுப்பாடும் இன்றி வழங்க முடியும் என்றும்,

சுமார் 20 வீதமான விவசாயிகள் ஏற்கனவே சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இரசாயன பசளை பயன்படுத்துவதை விட சேதனப் பசளையை பயன்படுத்துவதன் மூலம் தரமான அதிக அறுவடையை பெற முடியும்.

சேதனப் பயிர்ச்செய்கை மூலமான காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அதிக கேள்வியும் அதிக விலையும் உள்ளதன என நேற்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டுச் சந்தைகளில் அதிக கேள்வி இருப்பதால் – கியூபா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே சேதனப் பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துகின்றன என்பது நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது.

பல மாவட்டங்களுக்கு இதுவரை சுமார் 95 வீதமான பசளை வழங்கப்பட்டுள்ளதுடன்,

சேதன உற்பத்தியை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டம் ஒன்றை வகுத்துள்ளதனைத் தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள்,

நட்டம் ஏற்படின், அதற்கு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி வழங்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

சேதனப் பயிர்ச்செய்கைக்கு தேவையான ஆதரவை வழங்க சுமார் 12 வெளிநாட்டு தூதரகங்கள் இதுவரை ஒப்புக் கொண்டுள்ளதுடன்,

சேதனப் பயிர்ச்செய்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்பதனையும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நேற்றைய சந்திப்பில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் ஜே. ஏ. ரஞ்சித், கமத்தொழில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜே. எம். உதித கே ஜயசிங்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய, நிலையான அபிவிருத்தி சபையின் தலைவர் கிறிஸ் தர்மகீர்த்தி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.