நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து வெளியான தகவல்!


 நியூசிலாந்தின் ஒக்லாந்தில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட இலங்கையின் மட்டக்களப்பை சேர்ந்த இளைஞன் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒக்லாந்தில் உள்ள சூப்பர் மார்கெட்டில் நேற்று முன்தினம் கத்திக் குத்து நடத்திய போது குறித்த இலங்கையர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டதில் 5 பேர் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒக்லாந்தில் உள்ள மார்கெட்டில் தாக்குதல் மேற்கொள்வதற்க்கு முன் அல்லாஹூ அக்பர் என கத்தியபடியே தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையர் சம்சுதீனின் தாயார் தற்போது கொழும்பில் வசிக்கிறார். தந்தையும், சகோதரியும் கனடாவில் வசிக்கிறார்கள். சகோதரர்கள் கட்டாரில் தொழில் புரிந்து வருகிறார்கள். தாக்குதலிற்கு புறப்படுவதற்கு முன்னதாக தனது தந்தையை தொலைபேசியில் அழைத்து, சாப்பாடு எடுக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

மேலும் இவர் குறித்து வெளியான தகவல்கள்,

அவர் மாணவர் விசாவில் 2011 இல் நியூசிலாந்திற்கு சென்று, இரண்டு வருடங்களுக்குப் பிறகு அகதி அந்தஸ்து பெற்றார். 2018 ஆம் ஆண்டில் குடிவரவு அதிகாரிகள் தனது அகதி நிலையை இரத்து செய்ய முயன்றனர். அவர் மேல்முறையீடு செய்தார். அவரை நாடு கடத்த முடியுமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அவரது அகதி அந்தஸ்து கோரிக்கையில், “இலங்கை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்ட தமிழ் மொழி பேசும் ஒரு சிறுபான்மை இனக்குழுவை சேர்ந்தவன். நானும், எனது  தந்தையும் அரசியல் பின்னணி காரணமாக கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டோம்“ என அவர் கூறியதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது கூற்றை அவரது உடலில் உள்ள வடுக்கள் ஆதரித்தன. அத்துடன் மனநல நிபுணரின் அறிக்கையும் சம்சுதீன் மன அழுத்தத்திற்கு பிந்தைய மன அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட “மிகவும் துயரமடைந்த மற்றும் சேதமடைந்த இளைஞன்” என்று கூறினார்.

சம்சுதீனுக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பான குடிவரவு பாதுகாப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பில், மனுதாரர் “தொடர்ந்து அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை மீண்டும் அனுபவிப்பதாக” கூறினார். அவர் தனது பெற்றோரின் பாதுகாப்பைப் பற்றி கோபமாகவும் கவலையுடனும் இருந்தார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல், நம்பிக்கையும் முதிர்ச்சியும் இல்லாத நிலையில், வெகு தொலைவில் வாழ்வதன் மூலம் அவரது கவலை அதிகரித்தது என அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் காரணமாக, சில வாரங்களுக்கு முன்பு, சம்சுதீனுக்கு அகதி அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது விரைவில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனது பெயரை பகிரங்கப்படுத்துவது அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர் அஞ்சினார். “இலங்கைக்குத் திரும்ப நான் மிகவும் பயப்படுகிறேன், ஏனென்றால் அங்குள்ள அதிகாரிகளுக்கு நான் பயப்படுகிறேன்… நான் என் நாட்டை விட்டு வெளியேறியபோது இருந்த அதே அபாயங்கள் மற்றும் அச்சங்கள் இன்னும் உள்ளன” என்று சம்சுதீன் நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி வழங்கிய தீர்ப்பில், சம்சுதீனின் அகதி நிலை தீர்மானிக்கப்படும் வரை அவரது அடையாளங்களை வெளிப்படுத்த இடைக்கால தடைஉத்தரவை பிறப்பித்தார்.

ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை குறைந்தது ஐந்து பேர் குத்தப்பட்ட பயங்கரவாதச் செயலுக்குப் பிறகு, குறிப்பிடத்தக்க பொது நலனைக் கருத்தில் கொண்டு, அவரது அடையாளத்தை வெளிப்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை சனிக்கிழமை இரவு நீதிபதி நீக்கிவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.