மீண்டும் விமான சேவையைத் தொடங்கும் ஜெட் ஏர்வேஸ்!
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது சேவையைத் தொடங்க உள்ளது.
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தனது சேவையை நிறுத்தியது ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ஜெட் ஏர்வேஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது சந்தை மதிப்பை இழந்து விமான சேவையில் இருந்து வெளியேறியது.
இந்த நிலையில், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க ஜெட் ஏர்வேஸ் தயாராகி வருகிறது.
முதல் விமானமாக டெல்லி - மும்பை இடையே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு முதல் இயக்கப்படும் என்று விமானம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் தனது விமான போக்குவரத்தை 1993 மே 5ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவின் முதல் தனியார் விமான நிறுவனம் ஜெட் ஏர்வேஸ்தான். முதல் ஆண்டுகள் மிகவும் பரபரப்பாக இயங்கியது. முதல் வருடத்தில் ஜெட் ஏர்வேஸ் 7,30,000 பயணிகளை வெற்றிகரமாக சுமந்து சென்றது. 2001ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸுக்குச் சொந்தமாக 30 விமானங்கள் இருந்தன. 37 இடங்களுக்குத் தினசரி 195 விமான சேவையை வழங்கி வந்தது. 2004இல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. மும்பையில் இருந்து லண்டனுக்குத் தனது முதல் சேவையை ஜெட் ஏர்வேஸ் வழங்கியது. 2005ஆம் ஆண்டு டெல்லி - லண்டன் சேவையை நீட்டித்தது. 2007ஆம் ஆண்டு ‘ஏர் சகாரா’ நிறுவனத்தை வாங்கியது. அதை ‘ஜெட் லைட்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.
2010இல் இந்தியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் உருவானது. 2013ஆம் ஆண்டு Ethihad Airway, ஜெட் ஏர்வேஸ் 24 சதவிகித பங்குகளை வாங்கியது. 2006இல் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள் உச்சத்தில் இருந்தது. இதற்கடுத்த ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் பங்குகள் குறையத்தொடங்கியது. நிறைய விமான நிறுவனங்கள் உள்நாட்டுப் போக்குவரத்தில் அடியெடுத்து வைத்தது இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. போட்டி நிறுவனங்கள் குறைந்த விலையில் விமான போக்குவரத்தை சாத்தியப்படுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குத் தலைவலியாக இருந்தது. இதன் விளைவாக 2014இல் மிகப் பெரிய சிக்கல்களைச் சந்திந்தது. 2013 - 14 நிதியாண்டில் 3,667 கோடி நஷ்டக் கணக்கைக் காட்டியது.
வாடிக்கையாளர்களுக்கு மற்ற நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை வழங்கியது. போட்டியைச் சமாளிப்பதற்கு பல்வேறு யுத்திகளை கையாண்டது. ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் அவ்வப்போது சிறுசிறு விபத்துக்குள்ளானதால் வாடிக்கையாளரின் நன்மதிப்பை இழந்தது. அதனுடன் சேர்ந்து எண்ணெய் விலை உயர்வும் ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது.
2018இல் மீண்டும் நிலைமை மோசமானது. தனது நிறுவன பங்குகளை விற்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. விமான நிறுவனத்தைத் தொடர்ந்து இயக்குவதற்காகப் பல்வேறு வங்கிகளில் கடன் பெறப்பட்டது. 2019இல் பொருளாதார சூழல் மேலும் சிக்கலானது. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஏப்ரல் 15ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எண்ணெய் சப்ளை செய்வதை நிறுவனங்கள் நிறுத்தியது. நிலுவைத் தொகை செலுத்தினால் மட்டுமே எண்ணெய் வழங்கப்படும் எனத் தெரிவித்தது. வேறுவழியின்றி அந்த நிறுவனம் அனைத்துச் சேவைகளையும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தியது.
இந்த நிலையில், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க ஜெட் ஏர்வேஸ் தயாராகி வருகிறது.
-ராஜ்
கருத்துகள் இல்லை