உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் - 4 பேர் பிணையில் விடுதலை!

 


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 4 பேரை சட்டமா அதிபரின் ஆலோசனையில் பிணையில் விடுவித்ததுடன் ஏனைய 51 பேரையும் எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று (31) உத்தரவிட்டார்.


கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்குல் மேற்கொண்டு இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டதுடன் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து 55 பேர் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ளவர்களை தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக அழைத்துவரப்படாத நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டது

இதன் போது இதில் காத்தான்குடியைச் சேர்ந்த 4 பேரை தலா 50 இலட்சம் ரூபா இரு சரீரப் பிணையும், தலா 50 ஆயிரம் ரூபா காசு பிணையிலும் விடுவித்ததுடன் மாத இறுதி வார ஞாயிற்றுக்கிழமை காலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சென்று கையொழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனைய 51 பேரையும் எதிர்வரும் 7 ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.