ஊடகவியலாளர் ரூபன் ஞாபகார்த்தமாக பொன்னாலையில் மரதன் ஓட்டப்போட்டி!

ஊடகவியலாளர் அமரர் அராலியூர் செ.ரூபன் அவர்களின் 8 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது. பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தின் ஏற்பாட்டில் பொன்னாலை ஸ்ரீ கண்ணன் விளையாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் 2018.04.22 ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி நடத்தப்பட்டது.
பொன்னாலை வெண்கரம் படிப்பகத்திற்கு முன்பாக காலை 6.45 மணியளில் இப்போட்டி ஆரம்பமானது. வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான தே.றஜீவன், ரி.சுஜிந்தன், ச. ஜெயந்தன், ந.பொன்ராசா மற்றும் வெண்கரம் செயற்பாட்டாளர் மு.கோமகன் ஆகியோர் இணைந்து இப்போட்டியை ஆரம்பித்துவைத்தனர்.
வெண்கரம் படிப்பகத்திற்கு முன்பாக ஆரம்பமான இப்போட்டி பொன்னாலைச் சந்தி, வட்டுக்கோட்டைச் சந்தி, சங்கரத்தைச் சந்தி, மாவடிச் சந்தி, மூளாய் வீதி ஊடாகப் பயணித்து ஆரம்பித்த இடத்தைச் சென்றடைந்தது.
இப்போட்டியில், ச.அஜந்தன் முதலாம் இடத்தையும் பா.டல்சியன் இரண்டாம் இடத்தையும் கு.அனுசன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் எதிர்வரும் புதன்கிழமை (25) வெண்கரம் படிப்பகத்தில் நடைபெறும் அமரர் ரூபனின் நினைவேந்தல் நிகழ்வில் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.