HNB வங்கியும் சிவாஜிலிங்கமும்..!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட
ஹட்டன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளை ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்தமை கண்டிக்கத்தக்கதென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர் எனக் குறிப்பிட்ட சிவாஜிலிங்கம், வங்கி தமது உத்தரவை மீளப் பெறவேண்டுமென கோரியுள்ளார்.

வங்கிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழர்களும் போராட்டத்தில் இறங்கினால் அது வங்கியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். அந்த நிலையை உருவாக்கிவிடக் கூடாதென சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையில், போரில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது தொடர்பில் அந்த வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பதவி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் தமிழர் தாயகத்தில் பலர் தமது கணக்குகளை மூடி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சிவாஜிலிங்கம் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பாடசாலைகளில் அரைக் கம்பத்தில் மாகாணக் கொடியை ஏற்றுமாறும் அலுவலகங்களில் அஞ்சலி செலுத்துமாறும் வடக்கு மாகாண சபையின் சார்பில் முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் கோரியிருந்தனர்.

அதனை ஏற்று பல இடங்களிலே அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோன்றுதான் ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையிலும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டதென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என அமைச்சர் ராஜித சேனாரட்னவும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கூறியிருந்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இராணுவத்தினர்கூட குளிர்பானங்களை வழங்கியிருந்தனர். இவ்வாறு இருக்கும் போது, குறித்த ஊழியர்களை இடைநிறுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டார்.

மேலும், இடைநிறுத்தப்பட்ட உத்தியோகத்தர்களின் வேலைக்கு ஆபத்து வருமாகவிருந்தால், வடக்கு – கிழக்கில் மாத்திரமல்ல தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஹற்றன் நஷனல் வங்கியை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளவேண்டாமென குறிப்பிட்டார்.

அத்தோடு, இச்செயற்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், தமிழர் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலமை உருவாகுமென சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.