வடக்கின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு விசேட பத்து வருட திட்டம்!

வடக்கின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு விசேட பத்து வருட திட்டமொன்றை நடைமுறைப் படுத்தப்போவதாகவும் வட மாகாண சபையுடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்று வதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன் வடக்கிற்கென விசேட கவனம் செலுத்தி மாகாண சபையின் ஒத்துழைப்புடன் 10 வருடத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு விசேட பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். முன்பு கல்வித்துறையில் கொழும்பு மாவட்டமும் யாழ். மாவட்டமுமே முன்னணியில் திகழ்ந்ததாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யுத்தத்தினால் அது பின்னடைவு கண்டுள்ளதாகவும் அத்துடன் 1983 ன் பின்னர் பெருமளவு கல்வியியலாளர்களை வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
வட மாகாணத்தில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாக பணிபுரிந்த 324 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
வடக்கு கல்வித் துறையில் நீண்டகாலப் பிரச்சினையொன்று இன்று தீர்வுகாணப்பட்டுள்ளது. மீதமுள்ள மேலும் தொண்டராசிரியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். யுத்தம் நிலவிய காலம் பெரும் கஷ்டங்கள், துன்பகரமான காலமாகும். அக்காலத்தில் வடக்கிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியபோது இந்த தொண்டராசிரியர்களே தமது சேவை மூலம் அதனை நிவர்த்திசெய்துள்ளனர்.
அதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். இவர்களை நிரந்தரமாக்குவதற்கு முறைமையொன்று இருக்கவில்லை. நாம் விசேட செயற்திட்டம் ஒன்றின் மூலம் இவர்களுக்கு நியமனம் வழங்க தீர்மானித்தோம். இடையில் உள்ளூராட்சி சபை தேர்தல் வந்ததால் இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் தாமதமேற்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் கல்வியில் சிறந்து விளங்கியது. கொழும்பைப் போன்றே யாழ்ப்பாணமும் கல்வியில் முன்னணியிலிருந்தது. யுத்தத்தினால் அது பின்னடைவு கண்டது. பாடசாலைகள் அழிவுற்று ஆசிரிகள் புலம்பெயர்ந்தமையே அதற்குக் காரணம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.