ஹக்கீமை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டக் குழு!

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 பிரதிநிதிகளைக் கொண்ட ஜன் சஹ்ரடில் மேப் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. 

பாராளுமன்ற அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது , 

அண்மையில் இடம்பெற்ற இனவாத வன்செயல்கள் மோசமடைவதற்கு வெறுப்பூட்டக்கூடிய பேச்சுகளை தடைசெய்வதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை, புலனாய்வுத்துறையின் அசமந்தப்போக்கு, தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கைள் எடுக்கப்படாமை போன்றவையே முக்கிய காரணங்களாகும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். 

மூன்று தசாப்தகாலம் நீடித்த கொடூர யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்த சூழ்நிலையில், சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள் மீதான இனவாத செயல்கள் அரசியல் பொருளாதார உள்நோக்கங்களை வைத்து தீயசக்திகள் முன்னெடுத்து வருகின்றன. 

உங்களுடைய நாடுகளில் இவ்வாறான வன்செயல்கள் நடக்க நேரும்போது உளவுத்துறை அதனை விரைவாக கண்டறிந்து விடுவார்கள். ஆனால், விழிப்புடனிருந்து துப்புத்துலக்கக்கூடிய உளவுத்துறையின் செயற்பாடு இங்கு மந்தகதியிலேயே இருக்கின்றது. அத்துடன், வெறுப்பூட்டக்கூடிய பேச்சை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என சுட்டிக்காட்டினார். 

அமைச்சர் கூறியவற்றை கவனமாக செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் மேற்படி விடயங்கள் மீது போதிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தனர். 

இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், ஏ.எல்.எம். நசீர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் பங்குபற்றினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.