நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியா?, வெற்றியா? மைத்திரி கையில்!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளிலே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற உல்லாச விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழா நிறைவில் அங்கிருந்து வெளியேறுகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவர் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மேலும் பதிலளிக்க முற்பட்ட வேளையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மஹிந்த ராஜபக்ஷவின் வலது கையை இருக்கிப்பற்றிக் கொண்டார்.
அதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தரும் வகையில் அனைவரும் என் கையை பிடிக்கின்றார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் ஆதரவாகவே செயல்படுகின்றார்கள்.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும், நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடமே கடைசி தீர்மானம் உள்ளது. ஆனால் நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக பூரண நம்பிக்கையிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரேரணையை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையிலேயே தங்கியுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி பதில் அளிக்கையில், இடையில் குறிக்கிட்ட ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நீங்கள் ஏன் கையொப்பம் இடவில்லை. இது தான் எனக்கும் பிரச்சினையாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, இப்போது மாத்திரம் ஏன் கையொப்பமிடுவதற்கு எப்போதும் நம்பிக்கை என்பது இருந்தது இல்லையே என்றார்.
இதன்போது ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும் கருத்து தெரிவித்தபோது,
மனிதனுக்கு இரண்டு கண்கள் உண்டு. ஒரு கண் மைத்திரிபால சிறிசேன என்றால் மற்றொரு கண் மஹிந்த ராஜபக்ஷவாகும். இவ்வாறே நாம் செயல்படுகின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.