தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் தலைவர் பிரபாகரனே!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகரான ஒருவராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்-
“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் இ.எ.ஆனந்தராஜா, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நிகரான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று கூறினார் என்றும் அதனை கஜேந்திரகுமாரே திட்டமிட்டு செய்வித்தார் என்றும் வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை. அவை எமது கட்சி மீதான காழ்ப்புணர்வாலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான காழ்ப்புணர்வாலும் செய்யப்படும் பொய் பிரசாரங்கள் ஆகும்.
தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவர் மட்டுமே என்பதும் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாதென்பதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சியிலுள்ள அனைவரதும் உறுதியான நிலைப்பாடாகும்.
எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கும் தகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உண்டு என்று ஆதரவாளர்கள் கூறும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களிடம் அவ்வாறு தன்னை குறிப்பிட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒருவராகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயற்பட்டு வருகின்றார்.
தேசியத் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் வரை பேச்சுவார்த்தை மேசையில் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை இனப்பிரச்சினைத் தீர்வாக வலியுறுத்திவந்தாரோ அந்நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அடிக்கடி வலியுறுத்துவதுண்டு.
கஜேந்திரகுமார் தன்னை தமிழ் இனத்தின் தலைவராக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் ஒருவர் அல்லர். அதனாலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவரப்பட்ட போது அப்பிரேரணையை தோற்கடிப்பதற்காகவும், அவருக்கு ஆதரவாகவும் இளைஞர்களை திரட்டிச் சென்று நடத்திய போராட்டத்தில்  விக்னேஸ்வரன் தலைமையேற்க வரவேண்டுமெனவும் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உறுதியற்ற நிலையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், த.வி.கூட்டணி ஆகிய தரப்புக்களை கைவிட்டு  விக்னேஸ்வரன், பேரவை உறுப்பினர்களையும் பொது அமைப்புக்களையும் இணைந்தவாறு கட்சியை உருவாக்கி எம்மை கூட்டுக்கு அழைத்தால் அவரது தலைமையில் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தயார்.
எதிர்காலத்தில் தன்னை தமிழினத்தின் தலைவர் என்ற அடிப்படையில் யாரும் கருத்துக்கூறக்கூடாது என்பதனை உறுப்பினர்களுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார்” எனவும் கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.