ஊடகவியலாளர் கற்கை நெறிக்கான நிதி அதிகரிப்பு!

ஊடகவியலாளர்களின் தொழில் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வருடாந்தம் நடைமுறைப்படுத்தும் ஊடகவியலாளர் கற்கை பயிற்சிநெறிக்காக வழங்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நிதி, தற்போது இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு ஊடகத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இம்முறை கற்கை நெறிக்காக, திருப்பிச் செலுத்தப்படாத புலமைப்பரிசிலுக்கான நிதி பட்டம் மற்றும் பட்டப்பின்பிடிப்புக்காக வழங்கப்படும் நிதி இரண்டு இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேபோன்று நீண்டகால மற்றும் குறுகிய கால சான்றிதழ் கற்கை நெறிக்காக வழங்கப்படும் ஆகக்கூடிய தொகையாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள், தற்போது கோரப்பட்டுள்ளன. ஊடகத்துறையில் மூன்று வருட காலம் சேவையாற்றிருக்க வேண்டும். நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் ஊடகவியலாளராக பணியாற்றியிருக்க வேண்டும்.

18 வயதிற்கும் 55 வயதிற்கும் இடைப்பட்ட ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், இணையத்தள ஊடகவியலாளர்கள் ஆகியோர் இதற்கென விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை ஜுலை மாதம் 16ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக பணிப்பாளர் ஊடகம், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு, இலக்கம் 163, கிருலப்பனை மாவத்தை, பொல்ஹெயன்கொட, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பப்படிவத்தை www.media.gov.lk என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.