வடக்கில் மீண்டும் ஈழ வாதக் கொள்கை பலமடைந்துவருகின்றது!

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஜனநாயக சூழலை பயன்படுத்தி வடக்கில் மீண்டும் ஈழ வாதக் கொள்கை பலமடைந்துவருகின்றது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே 18ஆம் திகதி வடக்கில் இடம்பெறும் நினைவு தினங்கள் குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் இணைச் செயலாளர் மற்றும் ஊடகப்பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க விடுத்துள்ள விசேட அறிவித்தலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

தெற்கில் இடம்பெறும் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். ஆனால் வடக்கில் இடம்பெறும் அரசியல் மாற்றம் குறித்து எவரும் கவனம் செலுத்துவதில்லை.

இந் நிலையில் எதிர்வரும் 18,19 ஆம் திகதிகளை இம்முறை இராணுவ வெற்றி தினமாக கொண்டாடாது தேசிய வெற்றி தினமாக அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளோம். ஆனால் வட மாகாண சபையில் இத் தினத்தினை  இன அழிப்பு தினம் எனவும் இந்த தினத்தை தேசிய துக்க தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

எனவே நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ள ஜனநாயக சூழலை பயன்படுத்தி வடக்கில் மீண்டும் பயங்கரவாத அல்லது ஈழவாத நகர்வுகள் பலமாக முன்னெடுக்கபட்டு வருகின்றது.

ஆகவே  மே 18 ஆம் திகதி புலிகளை நினைவுகூரும் வகையில் வடக்கில் இடம்பெறும் சகல செயற்பாடுகளையும் அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.