யாழில் மாற்றுத்திறனாளியை தாக்கிய பேருந்து நடத்துனர்!

யாழ்ப்பாணத்தில் இருந்து குப்பிளான் நோக்கி பயணமாவதற்கு ஆயத்தமாக இருந்த 770 இலக்க பேருந்தில் ஒருவகை சலவை உற்பத்தி பொருளை விழிப்புலனற்ற மாற்றுத்திறனாளியான ஒருவர் விற்பனை செய்வதற்கு முயன்றுள்ளார்.

அவர் வழமையாகவே அந்த வழி இலக்கப் பேருந்துகளில் விற்பனையில் ஈடுபடும் ஒருவராவார் . குறித்த நபரை அந்தப் பேருந்தின் நடத்துனர் பேருந்தில் ஏறி விற்பனையில் ஈடுபட வேண்டாம் எனத் தடுத்துள்ளார்.

எனினும் அவர் தான் வழமையாக விற்பனை செய்பவன். பேருந்து செல்வதற்கு நேரம் இருக்கின்றபடியால் சிறிது நேரம் விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளவிடுமாறு கேட்டுள்ளார்.

அந்தச் சமயம் பேருந்துக்கு அருகில் இருந்த வேறொரு நபர் குறித்த மாற்றுத்திறனாளியை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் சற்று பதற்றம் நிலவியிருந்தது. பேருந்து புறபட்ட பின்னர் நடத்துனரிடம் பேருந்தில் இருந்த வேறு ஒரு பெண் ஏன் அவ்வாறு செய்தீர்கள் எனக் கேட்க முறையற்ற விதத்தில் பதிலளித்துள்ளார்.இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் மனக்கிலேசம் அடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, – இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. குறித்த நடத்துனருடனோ அல்லது பேருந்து சம்பந்தப்பட்டவருடனோ தொடர்பேதும் இல்லாமல் அந்த தனிநபர் குறித்த மாற்றுத்திறனாளியை தாக்கியிருக்க முடியாது.

அத்துடன் நடத்துனர் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு முறையற்ற விதத்தில் பதில் வழங்கினார் எனவும் எமக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் – எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.