ஒற்றையாட்சிக்குள் மக்களை முடக்க கூட்டமைப்பு முயற்சி!

தமிழ் தேசியத்தினை நீக்கி ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கான நடவடிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கொண்டுவரவுள்ள அரசியலமைப்பை நிராகரிக்க தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ் மக்களிற்கு தெளிவுடுத்தும் வகையில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியல் அமைப்பிற்கான முயற்சிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு, ஒற்றையாட்சி அரசியலமைப்பை வலியுறுத்தி தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிப்பதற்கான நிலமையைக் காட்டுவதற்காக முயற்சிகள், கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் போது கூட்டமைப்பிற்கு கிடைத்த தோல்வியின் பின்னர் கைவிடப்பட்ட நிலையில், மீளவும் அரசியலமைப்பு தொடர்பாக ஆட ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிமைப் போராட்டத்திற்கு மாறான அமைப்புக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில் தமிழ் தேசிய நீக்கத்தினைச் செய்வதற்கான முடிவிற்கு வருகின்றார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பேரிவாதத்தினைப் பேசும் பெரும் இனவாதி என்ற வகையில், மஹிந்த ஆட்சியில் இருந்த போது, தமிழ் தேசிய நீக்கத்தினை செய்ய முடியாது என்ற பிரச்சினை இருந்ததினால், மஹிந்த ராஜபக்ஷ சீனா சார்ந்த போக்குடையவர் என்ற காரணத்தினாலும், மஹிந்தவை அகற்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ் மக்கள் தமிழ் தேசிய கோட்பாடுகள் அனைத்தையும் கைவிட்டு, ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அடிப்படை திட்டம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில், இரா.சம்பந்தன் தலைமையில், தேசியவாதி இல்லாத ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இணைத்து தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான பங்களிப்பைச் செய்வதற்காக சுமந்திரன் இணைக்கப்பட்டுள்ளார்.

சுமந்திரன் அடிப்படையில் தமிழ் தேசியவாதி அல்ல. அவர் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர். சுமந்திரனை வல்லரசுகளும், ஐக்கிய தேசிய கட்சியும், சிங்கள தேசிய நலன்சார்ந்த தரப்புகளும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் ஒத்துழைப்புடன், தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் நடைபெறுகின்றதாக குற்றஞ்சாட்டினார்.

அதன் ஒரு பிரதிபலிப்புக்கள் தான் கடந்த காலங்களில் வெளியாகிய புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கைகள். புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையினை சுட்டிக்காட்டியே கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது.

தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. அவற்றினை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒற்றையாட்சியை மீளக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த இருவாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சிங்கள தேசியவாதத்தின் அங்கமாக தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, ஒற்றையாட்சி மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ ஆணித்தரமாக பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு என்பது ஒரு ஒற்றையாட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எனப் பல தடவைகள் தெரிவித்து வந்தோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து, ஒற்றையாட்சிக்கான ஒரு அரசியலமைப்பினையே உருவாக்குகின்றார்கள். மஹிந்த அணியினர் தமது அரசியலுக்காகவே, அரசியலமைப்பை எதிர்க்கின்றார்கள் என பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்தோம்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது கூறிய அனைத்து விடயங்களும் இன்று அம்பலமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்கள் என்பதனை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மற்றும், பிரதி சபாநாயகர் போன்ற விடயங்கள் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய அரசியல்கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஷ சீன சார்ந்தவர் என்பதற்காக எதிர்க்கின்றார்களே தவிர, மஹிந்த அணி மீண்டும் அரசியலுக்கு வந்தால், அரசியலமைப்பை ஒற்றையாட்சிக்குள் கொண்டு வருவதற்கு முனைகின்றதுடன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனிடம், நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலிற்குள் செயற்பட வேண்டாம், எங்களுடன் ஒத்துழைத்தால், ஐக்கிய தேசிய கட்சியிடம் கேட்கும் கோரிக்கைகளை தாங்கள் செய்யத் தயார் என்ற கோணத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனிடம் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் தேசிய நீக்கத்தினை செய்வதற்கு 2009 ஆம் ஆண்டு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்தது மட்டுமன்றி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தமது விடயங்களை நிறைவேற்றினால், சிங்கள மக்கள் மத்தியில், இரு கட்சிகளையும், நிலை நிறுத்த முடியும் என்ற கோணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றதாக குற்றஞ்சாட்டினார்.

இந்த உண்மைகளை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால், மீண்டும் ஒற்றையாட்சியை நிறைவேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்பதுடன், மஹிந்த ராஜபக்ஷவே அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலமையில் இருக்கின்றார் எனின், தமிழ் தேசியத்திற்கு மாறான அரசியலமைப்பு என்பதனை மக்கள் உணர்ந்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.