ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா?(வேதியன்)

முதலில் ஹோமத்தின்போது காசுகளஅதில் போடலாமா கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஹோமங்கள் பலவகைப் படுகின்றன.
வைதீக முறை,ஆகம முறை,சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன. வேதத்தின் அடிப்படையில்செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று
அழைக்கப்படுகிறது. அக்னி பகவானை
தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. அதாவது எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும்
வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார்.

இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களைமட்டுமே ஹோமத்தில் இட
வேண்டும்.பெரும்பாலும் சமித்து, அன்னம்,
ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப் படுகின்றன. விசேஷமாக அறுகம்புல்,
வெள்ளை எள்நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள். இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம்
நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி வைதீக ஹோமத்தில் ஹோமத்திற்குள் இடுவது இல்லை.

அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும் சக்தி வழிபாடான சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில்
இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை அக்னியின் பிரிப்பினாலும் வழங்கல்களினாலும்
இறைவனை அடைகின்றன.இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.
இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலான வற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள். இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது
நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம்.

மாறாக எளிதில் உருகாத இரும்பு நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.
பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லறை காசுகளைப் போடுவது என்பது தவறு.
நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில்
செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும். அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள
வேண்டும். ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு. எனவே இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது
சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.
ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும் அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது மண்ணில் பதைத்து வைப்பது என்பது பிற்கால சிந்தனைகளே.

ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை
எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்னமும்
ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும்
என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிகமிக நல்லது.
அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல்.ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக் கொள்ளும் இரக்ஷையும் அந்த பஸ்மமான சாம்பலுமே ஆகும். ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதனையே வாயிற்படியில் மஞ்சள்துணியில்
கட்டியும் வைக்கலாம்.

#Hindu     #Temple  #ommam

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.