பிரியங்காவிற்கு மாற்று கேத்ரினா!

சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘பாரத்’ படத்திலிருந்து பிரியங்கா சோப்ரா விலகியதை அடுத்து, அப்படத்தில் நடிகை கேத்ரினா கைஃப் இணைந்திருக்கிறார்.

பாலிவுட்டில் ‘ரேஸ் 3’ படத்திற்குப் பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படம் ‘பாரத்’. 2014ஆம் ஆண்டு வெளியான ‘ஒடி டு மை ஃபாதர்’ என்ற தென் கொரியத் திரைப்படத்தை தழுவி உருவாகிறது. இப்படத்தின் மூலம் சல்மான் கான் மூன்றாவது முறையாக அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதுல் அக்னிகோத்ரி, அல்விரா கான் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிகைகள் திஷா பதானி, தபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சல்மான் கானின் படங்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும். அதே போல் இப்படத்தை அடுத்த ஆண்டு (2019) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சல்மான் கானின் படங்களான, பாஜ்ரங்கி பாய்ஜான் (2015), சுல்தான் (2016), டியூப் லைட்டு (2017), ரேஸ் 3 (2018) ஆகிய படங்கள் ரம்ஜானில் வெளியாகி 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு ‘பாரத்’ திரைப்படத்தையும் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக முதலில் பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்திருந்தனர். படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகக் கூறி பிரியங்கா சோப்ரா படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்குப் பதில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் கேத்ரினா கைஃப் இணைந்துள்ளதாக இயக்குநர் அலி அப்பாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தக் கூட்டணி 2017ஆம் ஆண்டு வெளியான ‘டைகர் ஸிண்டா ஹை’ என்ற திரைப்படம் மூலம் இணைந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.