சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றனர்!

 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் இன்று எங்களை கிழக்கில் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றன. சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுடனான சந்திப்பு நேற்று (11) ஆலங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முதற் தடவையாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டோம்.
இதன்மூலம் அழிந்துபோயிருக்கின்ற ஒரு கட்சிக்கு உயிரூட்டுகின்ற ஒரு வேலையை பார்த்துவிட்டோமா என்று சிந்திக்கத் தூண்டுகிறது. அது மாத்திரமின்றி அழிந்து போயிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இன்றும் தலைதூக்கி ஆடிக்கொண்டிருக்கிறது.
நாங்கள் ஆட்சியமைக்கக்கூடிய சபைகளில், எங்களது எதிரிகளுக்கு ஆட்சியை பெற்றுக்கொடுப்பதில் சுதந்திரக் கட்சியினர் ஆர்வத்துடன் செயற்பட்டு சில இடங்களில் தங்களது கைவரிசையையும் காட்டியுள்ளனர். ஆட்சியிலுள்ள சினேக சக்திகள் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருப்பவர்கள் எங்களை கிழக்கில் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றனர்.
கடந்தகால ஆட்சியாளர்கள் குறித்து நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள் இந்தப் பகுதிகளில் மூக்கு நுழைப்பதற்கு வரவில்லை. ஆனால், அரசாங்கத்தில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகள்தான் இன்று எங்களுக்கு பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர்.
அடுத்த கட்ட அரசியலுக்காக கட்சியின் கட்டமைப்பை சீர்ப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் ஒரு அங்கமாக வட்டார ரீதியாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களை அமைப்பாளர்களாக நியமிக்கவுள்ளோம்.
அபிவிருத்தி விடயத்தில், கம்பெரலிய போன்ற திட்டங்கள் மூலம் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கும் 200 மில்லியன் ரூபாவை இந்த வருடத்துக்குள் பெற்றுக்கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.