கமலுக்கு க்ரீன் சிக்னல்!

விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிராக சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து இன்று (ஆகஸ்ட் 9) உத்தரவிட்டுள்ளது.

மர்மயோகி படத்திற்காக கமலுக்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடியாகக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர் கே.எஸ்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன் இன்று நடைபெற்றது. இதில் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடும் ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “இந்த படத்தின் மொத்த உரிமையும் நாங்கள் வாங்கியுள்ளோம். படத்திற்குத் தடை விதிக்கும் பட்சத்தில் அதனால் பாதிக்கப்படுவது நாங்கள்தான்” எனக் கூறினார்.

கமல் தரப்பில், “மர்ம யோகி படத்தில் நடிப்பதற்காகவும் இயக்குவதற்காகவும் ரூ.4 கோடி முன்பணமாகப் பெற்றேன். படத்தின் கதை, திரைக்கதை அனைத்தும் தயாராகிவிட்டன. ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுவிட்டது. மேற்கொண்டு படப்பிடிப்புக்காக அவர்கள் கொடுத்த காசோலை திரும்பிவந்துவிட்டது. இதனால் படம் தடைபடும் சூழ்நிலை உருவானது. எனினும், மர்ம யோகி படத்துக்கு வேறு ஒரு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் பணத்தைத் திருப்பித் தருவேன்” என்று வாதிட்டனர்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாய்மீரா தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் விஸ்வரூபம் 2 வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.