பொலிஸ் பொறுப்பதிகாரி தமிழ் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை என்ன?

வவுனியா- கனராயன்குளம் பகுதியில் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்காக தமிழ் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் பொறுப்பதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு அனுப்பியுள்ளார்கள்.

இன்று நடைபெற்ற வடமாகாண சபையின் 131வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸன், கனகராயன் குளம் பகுதியில் குடும்பம் ஒன்றின் மீது பொலிஸ் அதிகாரி நடாத்திய தாக்குதல் தொடர்பாக விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு கொண்டு வந்தார்.

விசேட கவனயீர்ப்பை சபைக்கு கொண்டுவந்து அவர் கருத்து கூறும்போது,

சிவில் உடையில் நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் மீதும், அவருடைய மனைவி, பிள்ளைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இது மோசமான செயலாகும். தாக்குதலுக்குள்ளான பெண் பிள்ளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான மிலேச்சத்தனமான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் உடனடியாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரினார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கூறுகையில், குறித்த தாக்குதல் சம்பவத்தின் அடிப்படை காணி பிரச்சினையாகும். அது நீதிமன்றில் வழக்கில் உள்ளது.

இவ்வாறான காணி பிரச்சினையில் ஒரு பொலிஸ் அதிகாரி, சிறுவர்கள் உட்பட ஒரு குடும்பத்தையே அடித்து சித்திரவதை செய்து வைத்தியசாலையில் சேர்க்க வேண்டிய தேவை என்ன உள்ளது?

அதுவும் சிவில் உடையில் வந்து வீட்டில் வைத்து தாக்கிவிட்டு பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் வைத்து தாக்கிவிட்டு மதுபோதை என கூறி வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் மக்களிடமிருந்து எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆயினும் எதற்குமே நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே இந்த சம்பவத் தை அடிப்படையாக கொண்டு குறித்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவை தலைவர்,

சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான முதலமைச்சர் சபையில் இல்லை. ஆயினும் முதலமைச்சரின் இணைப்பாளர் பார்வையாளர் அறையில் இருக்கும் நிலையில் அவர் இந்த விடயத்தை உடனடியாக முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்று தாக்குதல் நடாத்திய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கும், தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்த்தருக்கு வைத்தியாலையிலும் மாட்டப்பட்டுள்ள கைவிலங்கை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.