வேலணையூர் ரஜிந்தன் படைத்த இருநூல்கள் வெளியீட்டு விழா.

நிறைந்த தமிழுறவுகளுடன் யாழ்ப்பாணம், வேலணையில் நடந்தேறிய வேலணையூர் ரஜிந்தன் படைத்த இருநூல்கள் வெளியீட்டு விழா.

இளையவர்களின் வருகை ஈழத்தில் பரவுகை ஏற்றமே. அவை நூலாதலும் படிநிலை உயர்ச்சியே. ஈழத்தின் யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த இளைய படைப்பாளி வேலணையூர் ரஜிந்தன் படைத்த 'நிலா நாழிகை', 'பொற்கனவு' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவானது 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு வேலணை தெற்கு தாளையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்விற்கு யாழ்.இலக்கியக் குவியத் தலைவர் கவிஞர் வேலணையூர் தாஸ் தலைமை வகித்தார். பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் கலந்துகொண்டார்.

விருந்தினர்கள் வரவேற்பினைத் தொடர்ந்து சுடரேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து அகவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து என்பன முறையே இடம்பெற்றன. வரவேற்பு நடனத்தினை வேலணை மத்திய கல்லூரி மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை வேலணை துறையூர் கலை இலக்கிய வட்டத்தின் செயலாளர் நிவேதிகா கஜரூபன் நிகழ்த்தினார். ஆசியுரையினை வேலணை தெற்கு துறையூர் ஐயனார் ஆலய பிரதம குரு சி.மாதவராஜசர்மா வழங்கினார். தொடர்ந்து கவிஞர் வேலைணையூர் சுரேஷ், யோ.புரட்சி, ஆகியோர் வாழ்த்துரை அளித்தனர். தலைமையுரையினைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. நூலினை வடக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் வெளியிட, 'பொற்கனவு' நூலினை யாழ்.இந்து மகளிர் கல்லூரி உப அதிபர் 'தேசமான்ய' லயன் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் பெற்றுக்கொண்டார். 'நிலா நாழிகை' நூலினை கிருபா லேணர்ஸ் அதிபர் 'சமூக திலகம்' அ.கிருபாகரன் சார்பாக இ.ம.அன்பரசன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து யாவர்க்கும் நூற்பிரதிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் நூலாசிரியரின் பெற்றோருக்கான‌ கெளரவிப்பும் அளிக்கப்பட்டது. சிறப்பு அதிதிகள் சார்பில் வேலணை பிரதேச செயலர் அம்பலவாணர் சோதிதாசன், சூரியன் பண்பலை அறிவிப்பாளர் மருத்துவர் நவரத்தினம் மணிவண்ணன், மன்னார் சென்.லூட்ஸ் மகா வித்தியாலய அதிபர் அந்தோனி வாஸ் ஜெயசீலன் ஆகியோர் நூலாசிரியருக்கான கெளரவம் அளித்து கருத்துரைத்தனர்.

சிறப்பு நிகழ்ச்சியாக வேலணை மத்திய கல்லூரி மாணவிகளான கயேந்திரன் கீர்த்தனா, ரவீந்திரன் அனித்தா, தனபாலசிங்கம் கேதராணி ஆகியோர் பங்கேற்ற பரத நாட்டியமும் இடம்பெற்றது. பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து 'பொற்கனவு' நூலின் ஆய்வுரையினை கவிஞர் கு.வீரா அவர்களும், 'நிலா நாழிகை' நூலின் ஆய்வுரையினை துணுக்காய் பிரதேச கலாசார உத்தியோகத்தர் கு.றஜீபன் அவர்களும் நிகழ்த்தினர். ஏற்புரையினை இரு நூல்களின் நூலாசிரியர் வேலணையூர் ரஜிந்தன் நிகழ்த்தினார்.

இவ்விரு நூல்களினையும் படைத்த இளைய படைப்பாளி வேலணையூர் ரஜிந்தன் மன்னார் சென்.லூட்ஸ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை ஆற்றி வருபவர். ஈழத்தின் படைப்புப் பட்டியலில் 'பொற்கனவு', 'நிலா நாழிகை' ஆகிய நூல்களும் இணைந்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.