துப்பாக்கி முனையில் தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை!


எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் தலா 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தகவலை அறிந்த தூத்துக்குடி மீனவர்கள் “சொந்தமா படகு இல்லாத காரணத்தினால் தான், நாங்களே மற்றவர்களின் படகுகளில் கூலிக்காக கடல் தொழிலுக்குப் போறோம். இந்த நிலையில 60 லட்சம் ரூபாய் அபராதமா? அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க போவது? அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கண்ணீர் வடித்துள்ளனர்.

இதில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடல்பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், அந்தோணி ரூபின்ஸ்டன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், வினோதன் மற்றும் பாக்கியம் ஆகிய 8 மீனவர்களுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து, “எல்லை தாண்டி மீன்பிடித்ததால் உங்களைக் கைது செய்கிறோம்” எனக்கூறி, துப்பாக்கி முனையில் படகுடன் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு, மீண்டும் கல்பிட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மீனவர் ஒருவருக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும், வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி வரை அதாவது மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் அளித்து தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து, மீனவர்கள் மீண்டும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.