தமிழீழ உருவப்பட அலங்காரம் தொடர்பில் ஒன்பது பேரிடம் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட தனி ஈழக் கோரிக்கையைக் குறிக்கும் வகையில் ஈழ வரைபடத்தை ஒத்த வகையில் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் சுவாமி அலங்கரிப்பட்டிருந்ததாக பெரும் சர்ச்சையும் எழுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பூசகர் ஆகியோரிடமும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா தொடர்பாக ஊடகவியலாளர் உதயராசா ஸ்ராலின் சகோதரர் உதயராசா ஜெஸ்ரினிடம் நேற்று முன்தினம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் பிரதேசத்தைச் சேர்ந்த க. இன்பரூபனிடம் நேற்றைய தினம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் தமிழீழ வரைபடத்தில் யார் அலங்காரம் செய்தது, அந்த செய்தியை ஊடகங்களுக்கு வெளியிட்டது யார் என்ற கேள்விகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரினால் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் தனித் தமிழீழத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவாமிக்கு அலங்காரம் செய்தமை தொடர்பில் இதுவரை 9 பேரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.