பத்திரிகையாளர் ஜமால் கசோகி வெட்டி படு கொலை செய்யப்பட்டதைக் காட்டிக் கொடுத்த அப்பில் கடிகாரம்!

துருக்கி இஸ்தம்புல் நகரில் உள்ள சௌதி (கொன்சல்) தூதுவர் காரியாலயத்துக்கு ஜமால் கசோகி வரும் வரை கொலையாளிகள் காத்திருந்துள்ளனர். ஜமால் கசோகி கொன்சல் ஜெனரலை சந்திக்க உள்ளே சென்ற போது அவரை கொன்சல் காரியாலயத்துக்குள்ளேயே துன்புறுத்தி விசாரணை செய்யும் போது அவர் இறந்தார் என சீ.என்.என். கடந்த 16ம் திகதி செய்தி வெளியிட்டது.
ஆனால் மிடில்ஈஸ்ட் ஐ பத்திரிகை நடந்ததை கீழ்க் கண்டவாறு விபரித்துள்ளது. அது மனதை திகில் கொள்ள வைப்பதாக உள்ளது. துருக்கியின் புலனாய்வு துறையினர் நடத்திய விசாரணையில் கண்டறிந்த தகவல்களையே மிடில்ஈஸ்ட் ஐ வெளியிட்டுள்ளது.
ஜமால் கசோகி எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை என்றும் , நேரடியாகவே
சௌதி அரேபியாவின் சல்மான் அரச குமாரனது கட்டளையின்படி துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அது தெரிவித்துள்ளது.
கொலையாளிகள் ஜமால் கசோகியை, நேரடியாக கொன்சல் அதிகாரியின் பக்கத்து அறைக்கு பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள் . அங்கே இருந்த மேசையொன்றில் படுக்க வைத்து உடலை வெட்டி துண்டுகளாக்கியுள்ளார்கள். அதன் வேதனை தாளாது ஜமால் கசோகி உரத்து சத்தமிட்டுள்ளார். ஜமால் கசோகியின் மரண ஓலத்தை தூதராலயத்தின் ஊழியர்கள் கேட்டுள்ளார்கள். ஜமால் கசோகியின் உடலை சௌதி தேசிய நீதிமன்றத்தின் வைத்தியரான சால் அல் டுபய்கீ என்பவரே உயிரோடு கூறு போட்டுள்ளார். 7 நிமிடங்களுக்குள் அவரை சாகடித்துள்ளார்கள். அந்த வைத்தியர் உடலை துண்டு துண்டாக வெட்டும் போது அவருக்கு உதவியோர் பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருந்துள்ளனர்.
ஜமால் கசோகி, மரண ஓலம் எழுப்பும் போது அவரது உடலுக்கு இரசாயன மருந்தொன்றை செலுத்தியுள்ளார்கள் என துர்க்கி அதிபர் ரிஜெப் தாய்ப் எர்தொவான் புலனாய்வு அறிக்கைகளை ஆதாரமாக வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜமால் கசோகி, படுகொலையான நான்கு நாட்களுக்கு பின்னர் தூதரகத்துக்குள் செல்லும் போது பல சாட்சிக்கான தடயங்கள் அழிக்கப்பட்டு விட்டன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதனால் அவரது உடலில் செலுத்திய இரசாயனம் என்ன என்பதை சரியாக சொல்ல முடியவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.
ஜமால் கசோகி, தூதுவராலயத்தினுள் நுழையும் போது ஒரு கறுப்பு வாகனம் வருவதையும், அதில் கொலையாளிகள் உள்ளே செல்வதையும், சீசீடீவீ கமராக்கள் மூலம் காணக் கூடியதாகவுள்ளது. அதன் சில மணி நேரங்களில் அவர்கள் ஒரு கறுப்பு நிற டிரவலிங் பையோடு செல்வதும், கமராவில் பதிவாகியுள்ளது. அதில்தான் ஜமால் கசோகியின் உடல் பாகங்களை அடைத்து கொண்டு போயுள்ளனர்.
ஜமால் கசோகி கையில் அப்பல் கடிகாரம் ஒன்றை அணிந்திருந்துள்ளார். அதனூடாக தூதுவராலயத்தில் நடந்த அத்தனை விடயங்களும் ஒலிவடிவில் பதிவாகியுள்ளதோடு , இணையத்தினூடாக ஜமால் கசோகியின் கடிகாரத்திலிருந்து அவரது இணைய கணக்குக்கு பகிரப்பட்ட சேவரிலிருந்து, துருக்கி நாட்டு புலனாய்வு துறையினர் அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளனர்.
ஜமால் கசோகி தனியாக சௌதி தூதுவராலயத்துக்கு வரவில்லை. அவர் திருமணம் செய்யப் போகும் ஹெட்டிமஸ் சென்கிஸ் எனும் பெண்ணுடனேயே வந்துள்ளார். அவர் ஜமால் கசோகி உள்ளே போய் வருவாரென வெளியில் காத்திருந்துள்ளார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் ஜமால் கசோகி திரும்பி வரவில்லை. அவரை தொடர்பு கொள்ள இவரால் முடியாதிருந்துள்ளது. காரணம் தூதரகத்துக்குள் நுழையும் போது அவரது கையிலிருந்த இரு கைத் தொலைபேசிகளையும் அவளிடம் கொடுத்து விட்டு போயுள்ளார்.
பல மணித்தியாலயங்களாகியும் அவர் வெளியே வராமையால், ஹெட்டிமஸ் , துருக்கி போலீசாருக்கு அழைப்பொன்றை ஏற்படுத்தி ஜமால் கசோகிக்கு ஆபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். அவர் தொலைபேசி வழி அன்றைய தினம் மாலை 5.33க்கு அழைப்பு ஒன்றை எடுப்பது பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
இத்தனை ஆதாரங்களையும் வைத்து ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என துருக்கி புலனாய்வு அதகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.
-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.