லெப்.போசன் கல்லறை நிகழ்வு! களஞ்சியம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது!

தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில்  ஒரு தமிழீழ விடுதலை புலியின் நினைவு கல்வெட்டு உள்ளது என்ற செய்தி பலரை ஆச்சிரியப்படுத்தியது. அந்த நினைவிடத்தை கண்டறிந்த தமிழர்நலப்பேரியக்கத்தின் தலைவர்  இயக்குநர் மு.களஞ்சியம் மாவீர நாளில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தார்.



மாவீர நாளான 27.11.2018 அன்று தஞ்சையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகள் அதே நாளில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளதால் 26.11.2018 மாலை  தமிழர் நலப்பேரியக்கத்தின் சார்பில் லெப்.போசன் அவர்களுக்கு நினைவேந்தல் நடத்த காவல் துறை அனுமதி அளித்திருந்தது.


அனுமதி மறுத்து கைது நடவடிக்கை

இந்நிலையில் தமிழர் நலப்பேரியக்கத் தோழர்கள் மு. களஞ்சியம் அவர்கள் தலைமையில் நிகழ்வு ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் இன்று காலை ( 26.11.2018) 10 மணிக்கு போசன் கல்லறையில் நினைவேந்தல் நடத்த திடீரென அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் தடையை மீறி நடத்துவோம்! வேண்டுமென்றால் எங்களை கைது செய்யுங்கள் என்று காவல்துறையிடம் முறையிட்டார் மு. களஞ்சியம்.


இன்று (26.11.2018) மாலை தமிழர் நலப்பேரியக்கத்தின் தோழர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மு. களஞ்சியம் அவர்கள் தலைமையில் பேரணியாக லெப். போசன் கல்லறைக்கு சென்றனர். போகும் வழியில் காவல்துறை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தது.


தடுத்து நிறுத்திய இடத்திலேயே மெழுகுவர்த்தி ஏற்றி மாவீரர் லெப்.போசனுக்கு வீரவணக்க முழக்கமிட்டு செலுத்தி அஞ்சலி செலுத்தினர். சிறிதுநேரம் அவ்விடம் பரபரப்பானது. ஏற்கெனவே அனுமதி கடிதம் பெற சென்றிருந்த தமிழர் நலப் பேரியக்கத் தோழர் ஒருவரை கைது செய்து வைத்திருந்த சூழலில், அனுமதி மறுப்புக் கடிதம் கேட்டும், கைது செய்து வைத்துள்ள தோழரை விடுவிக்க கோரியும், காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அனுமதி மறுப்புக் கடிதத்தை எழுத்துபூர்வமாக தரும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று தமிழர் நலப் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


காவல்துறை அனுமதி மறுப்புக் கடிதம் தருவாதகச் சொல்லி அனைவரையும் கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையைக் கண்டித்து அனைவரும் முழக்கமிட்டு சென்றனர்.

உளவுத்துறையின் தூண்டுதல் பேரில் தடை

ஒப்பாரி வீட்டில் அழுவதற்குக் கூட அனுமதி கேட்க வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டில்தான் தொடர்ந்து நடந்தேறுகிறது. 29 ஆண்டுகளாக பாராமரிப்பின்றி கேட்பாரற்றுக் கிடந்த போசன் கல்லறையை கண்டறிந்து அதற்கு ஒரு மலர் வளையும் கூட வைக்க அனுமதி மறுக்கிறது தமிழக காவல்துறை.


இப்படி ஒரு கல்லறை இருப்பதே மு.களஞ்சியம் கண்டறிந்த பிறகுதான் இந்திய உளவுத்துறைக்கும், தமிழக காவல்துறைக்கும் தெரியவந்துள்ளது. இனி அக்கல்லறையை முற்றிலும் தகர்த்துவிட கூட நினைக்கலாம். தமிழர் வரலாற்றை அழிப்பதற்கும், தடயங்களை மறைப்பதற்கு இந்திய அரசு தொடர்ந்து இனப்பகையை கக்குகிறது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே சாட்சி. இதற்கு தமிழக அரசு துணைபோகிறது என்பது வெட்கக்கேடு!


லெப். போசன் கல்லறையை சுற்று ஒருகிலோ மீட்டர் தூரம் வரை அப்பகுதியைச் சுற்று யாரையும் நடமாடவிடாமல் தடைவிதித்துள்ளது. தமிழக காவல்துறை. ஏதோ பயங்காரவாதிகளை சுற்று வளைப்பதுபோல் நிற்கிறார்கள். அங்கே இருப்பது வெறும் கல்லறைதான். அதன் உள்ளே உறங்குவது ஒரு மாவீர விதைதான்! இதற்கே இந்திய உளவுத்துறை நடுங்குகிறதென்றால் காரணம் என்ன? அந்த காரணம் வேறொன்று மில்லை தமிழின வீரம் செறிந்த இனம் என்பதால்தான்.

கைது நடவடிக்கைக்கு முன் செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய மு. களஞ்சியம் அவர்கள் “தமிழ் இனத்திற்காக இன்னுயிர் ஈந்த மாவீரன் போசனுக்கும் நாங்கள் மீண்டும் இதே துயிலுமில்லத்திற்கு வந்து நிகழ்ச்சியை நடத்துவோம்! தமிழ் நாடெங்கும் உள்ள தமது இயக்கத் தோழர்களையும், பிற அமைப்புத் தலைவர்களை ஒருங்கிணைத்து நீதிமன்ற அனுமதியோடு இந்த மாவீரநாள் நிகழ்வை வலிமை யோடு நடத்துவோம்” என்று கூறினார்.

தோழர்கள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். “இனம்காக்க மடிந்தவருக்கு மாரடித்து அழ அனுமதி மறுக்கும் காவல்துறை. யாரையோ திருப்திபடுத்த அன்றாடம் மாராடிக்கிறது”
- கவிபாஸ்கர் -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.