தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்றாகும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட புலிக் கொடியை, தமிழீழத் தேசியக் கொடியாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்  1990ஆம்  ஆண்டு இதே நாளில் பிரகடனப்படுத்தி வைத்தார்.



ஒரு நாட்டின் தேசிய இனங்கள்; நாட்டு மக்கிளின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக் கொடி விளங்குகின்றது. ஒவ்வொரு நாட்டின் இயல்புகள் நிலைமைகள், எண்ணங்களின் வெளிப்பாடாக அந்தந்த நாட்டுக் தேசிய கொடிகளின் சின்னம் நிறம் அளவு என்பன வேறுபட்டிருக்கும். தேசியக் கொடியின் அளவு பெரும்பாலும் 3:2 என்ற அளவினதாகவே இருக்கின்றது. சில நாடுகளின் தேசியக் கொடிகள் 2:1, 1:1 என்ற அளவினைக் கொண்டதாகவும் இருக்கின்றது.

நாம் போற்றி வணங்குதற்கூடாக தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது.தேசியக்கொடியை வணங்குவது நாட்டை வணங்குவது போலாகும்.

நாட்டை போற்றி வணங்குவதற்கூடாகத் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது.தேசியக்கொடியை வணங்குவது நாட்டை வணங்குவது போலாகும்.

நாட்டின் தலைவர்களை விட, படை, ஆட்சி என்பவற்றை விட உயர்ந்ததாகத் தேசியக் கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்த ஒரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின் போதும் நாட்டின் தலைவர், படை, அரசலுவலர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.

தேசியக் கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைகின்றன. அது போன்றே தேசியக் கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டைச் சென்றடையும், எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்படும் அக்குற்றத்துக்குக் கடும் ஒறுப்பு (தண்டணை) வழங்கப்படுகின்றது.

எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் 1977 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கென உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த புலிக்கொடியில் இருந்த எழுத்துக்கள் நீக்கபட்டு தமிழீழத்தின் தேசியக்கொடியாக 1990 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் அறிவிக்கட்பட்டது. 1990 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் மாவீரர் எழுச்சிவாரத் தொடக்க நாளன்று முதல் தடவையாகத் தமிழீழத் தேசியக் கொடி எமது தேசியத் தலைவர் அவர்களால் ஏற்றிவைக்கபட்டது.

அன்றிலிருந்து தமிழீழம் (2009க்கு முன்னர்) மற்றும் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டே தொடங்கப்படுகின்றன. தேசியக்கொடி ஏற்றப்படும்போது தமிழீழத் தேசியக்கொடி வணக்கப்பண் பாடப்படுகின்றது.

தலைவர்கள், சிறப்புக்குடிமக்கள் போன்றோரின் மறைவையொட்டி ஏற்படும் நாட்டின் துயர நிகழ்வுகளின்போது தேசியக்கொடி கொடிக்கம்பத்தின் உச்சிவரை ஏற்றப்பட்டு கொடிக்கம்பத்தின் நடுப்பகுதிவரை இறக்கிக் கட்டிப் பறக்கவிடப்படுவது வழக்கம். இதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது.

எமது நாட்டை அமைப்பதற்கான விடுதலைப் போராட்டத்தை வீறு கொள்ளவைத்த, மக்களை விடுதலை இயக்கத்தின்பால் ஈர்த்து அணி திரளவைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்குறியான (இலட்சினையான) பாயும் புலியே எமது தேசியக்கொடியின் நடுவில் அமைந்திருக்கிறது.

எமது தேசியக்கொடியை மஞ்சள்,சிவப்பு,கறுப்பு,வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன.

தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்த தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால் அவர்களுக்குத் தன்னாட்சி(சுயநிர்ணய)உரிமை உண்டு. இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து,தன்னாட்சி உரிமையை நாட்டுவதற்கு தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கின்றது.

ஏற்றத் தாழ்வுகளற்ற, வர்க்க, சாதிய, முரண்பாடுகளற்ற பெண்ணடிமைத்தனமற்ற புரட்சிப்பாங்கான அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

கரடுமுரடான, சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்த வழிக்கூடாகச் சென்று எமது இலக்கை அடைவதற்கு வேண்டிய உருக்குப்போன்ற உள்ள உறுதியைக் கறுப்பு நிறம் குறித்துக்காட்டுகின்றது.

அமைப்பினதும் போராட்டத்தினதும் தூய்மையை, நேர்மையை வெள்ளை நிறம் வெளிப்படுத்தி நிற்கின்றது.

எமது தேசியக் கொடியை நாம் எமது உயிரிலும் மேலாகப் போற்றிப் பேணிப்பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.