கேட்டவரம் தரும் ஸ்ரீ முத்தாரம்மன்

நாகர்கோவில் ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை கிருஷ்ணன்புதூர் பூ சந்தை அருகே உள்ளது ஸ்ரீ முத்தாரம்மன் கோயில். பண்டாரபுரம், தோவாளை வடக்கூர், தோவாளை கிருஷ்ணன் புதூர் போன்ற பகுதிகளின் அக்கா, தங்கையாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து
வருகின்றாள். கிருஷ்ணன் புதூர் பகுதியில் தங்கையாக அமர்ந்து தன்னுடன் பரிவார தெய்வங்களாக விநாயகர், பைரவர், சங்கிலி பூதத்தார், பட்டவராயர், பட்டத்தி, விடுமாடன் ஆகிய தெய்வங்களுடன் இருந்து பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறாள். பல ஆண்டுகளுக்கு முன்பு தோவாளை பூ சந்தை லைப்ரரி அருகே இருந்துள்ளது.

பின்னர் முத்தாரம்மன் கோவில் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நாள் முதல் அனைவரது வாழ்கையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அம்மன் சன்னதிக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட எந்த தொழிலும் நஷ்டம் அடைந்தது கிடையாதாம். இதனால் கொடை நாளில் பூ வியாபாரிகள், பூ கட்டும் கலைஞர்கள் பூ மூலம் தாங்கள் புதிதாக வடிவமைக்க விரும்புகின்ற  வடிவங்களை போட்டி போட்டு கோவில் வளாகத்தில் கட்டுவது வழக்கம். இதனை பார்பதற்கு பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். ஒரு வருடம் தங்களது கைவண்ணத்தில் பூவை வடிவமைத்து கட்டியவர்கள் அடுத்த ஆண்டில் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.

அம்மனை நாடி வந்து மனம் உருகி வேண்டுகின்றவர்களுக்கு கேட்டவரம் கொடுக்கிறாள் முத்தாரம்மன். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தம்பதிகளாக வந்து மனம் உருகி வேண்டி சென்றால் அடுத்த ஆண்டு குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 2ஆம் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் கொடை விழா நடக்கிறது. இந்த நாளில் பூ வியாபாரிகள், பூ கட்டும் தொழிலாளர்களின் மூலம் அம்மன் சன்னதியில் அம்மனுக்காகவும், பரிவார தெய்வங்களுக்காகவும் பல வடிவத்தில் கட்டப்படுகின்ற பூமாலையினை பார்பதற்கும் அம்மன், பைரவர், சங்கிலி பூதத்தார், பட்டவராயர், விடுமாடன் தெய்வங்களின் அருள் வேண்டியும் பிற மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.