ராகு காலத்து துர்க்கை வழிபாட்டின் சிறப்புகள்.(வேதியன்)



ராகு காலம் என்று சொன்னதுமே நம் எல்லாருக்கும் நல்ல காரியங்களுக்கும் விலக்க மட்டமே என்று நினைக்கப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விசேட பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால்தான் அவற்றின் ஆற்றல்கள் கூடுதலாகும்.


ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள். ஆகவே மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணி நேரமாகும்.
ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்லமுடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை ஆற்றல் வாய்ந்தவை.

ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. ராகு கால துர்க்கா பூஜை என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது. இதில் மிகவும் விசேடமாகக் கருதப்படுவது செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. இதற்குரிய தெய்வம் மங்கள சண்டிகா
செவ்வாய் ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் இருந்தால் செய்யப்படும் பூஜை இந்தப் பூஜை. அதுமட்டுமல்லாது நீண்ட நாட்களாகத் தடங்கலாக இருந்த காரியங்கள் தொடர்ந்து வில்லங்கமில்லாமல் நடப்பதற்காகவும் செய்யப்படுவது. பெண்களுக்குத் திருமணமாவதற்காகவும் இதனைச் செய்வார்கள். இதற்கெனத் தனியே பூஜையும் இருக்கிறது.

ஒன்பது வாரங்களுக்கு விரதமிருந்து செய்யப்படுவது இந்தப் பூஜை. எலுமிச்சம்பழத்தை வெட்டி, சாற்றைப் பிழிந்துவிட்டு அதனை பிரட்டி, அதில் நெய்யை ஊற்றி சிறிய திரியைப்போட்டு தீபம் வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் என்னும் வழிபாட்டு மந்திரப் பாடலைப் படிப்பார்கள்.

மங்களன் என்பது செவ்வாய் கிரகத்தின் பெயர்களில் ஒன்று. ஆகவேதான் மங்கள சண்டிகாஎன்ற பெயர். செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி கிடைப்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிபட்டார்கள் என்ற ஐதீகம். முறையே அவர்களுக்குரிய நாள், நேரம் ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால் காரியசித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும் என்ற வரத்தையும் அவ்விருவரும் சண்டிகையிடம் பெற்றார்கள் என்று தேவீ பாகவதம் கூறுகின்றது. ஆகவேதான் செவ்வாய் தோஷம் நாக தோஷம் போன்றவற்றிற்கும் இந்தப் பூஜையை உரிய விரதமிருந்து பலன்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். எனவே இராகு கால துர்க்கை வழிபாட்டை மேற்கொண்டு வாழ்வில் நன்மைகளயப் பெறுவோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.