பேனா வீரம்...!



பேனை பிடித்தவனெல்லாம்
பானைக் கணக்காய் அவிச்சு இறக்குறான்...
"ஏ கே "யை
தொட்டுப்
பார்த்திராதவனெல்லாம்
ஆட்லறிக்கு ஆள்கூறு
கொடுத்ததாய்
அடிச்சு விடுகிறான் சும்மா...!
களவிற்குப்போய்
கம்பி கீறிக் கிழிபட்டவனெல்லாம்
மல்ரி அடியில் மயிரிழையில்
தப்பியதாய் வாய்கூசாது
பொய்கள்-அதனால்
நிரப்புகிறார்கள் தம் பைகள்...!
இரைச்சல்கேட்டவுடன்
பங்கரிலேயே மலம்
கழித்தவனெல்லாம்
இயக்கப் பிளேனையே
அருகில் பார்த்ததாய் சும்மா
அடித்துவிடுகிறான் ஆயிரம்
கதைகள்....!
பெட்டைப் பிசகிலை
சுட்டுப் போடக் கொண்டுபோய்-பின்னர்
விடுபட்டவனெல்லாம்
தன் சட்டைக்கொலரை
தூக்கிவிட்டு திரிகிறான்
தானும்
முன்னாளில் தளபதியாம்...!
கந்தகப்பூக்களை
கட்டியணைத்தவர் சிலபேரே
இருக்க
கண்டபடி உளறல்கள்
காது வலி தாங்கவில்லை...!
" யூ டியூப்பை" பார்த்து
புலிச் சண்டையை அறிந்தவன்
ஒவொரு சண்டையிலும் தானும்
நின்றதாய் குத்துமதிப்பாய்
காட்டுகிறான்...
கூப்பிட்டபோதெல்லாம்
திரும்பாது போனவனெல்லாம்
"போட்டோசொப்" செய்து
வரியுடையில் கலக்குகின்றான்...
இல்லாத காயதிற்கு மெடிக்கல் எடுத்து
எங்கேயோ பார்த்த செய்தியை
கொடுத்து அகதி அந்தஸ்து
பெற்றவனெல்லாம்...
கட்டளைத்தளபதி கணக்காய்
கதைவிடுகிறான்....
முகநூலை பார்த்தால்
சந்தோசம் பிறக்கிறது....
புலித்தளபதிகள் பலர்
புலம்பெயர்ந்து இருக்கினம்
போலைத்தான் தெரிகிறது...!


குறிப்பு - நண்பர் Suren Pushpan அவர்களின் வரிகள் சிறு மாற்றங்களுடன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.