காணாமல் போனோரைத்தேடும் பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!!

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.


அத்தோடு இலங்கை பொலிஸார் தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனரென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையினை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பம்பியோ நேற்று முன்தினம் (புதன்கிழமை) வெளியிட்டார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதத்தன்மையற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் இருந்தாலும், இராணுவம் மற்றும் பொலிஸ் என்பன, பொதுமக்களைத் துன்புறுத்துகின்றன. அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையும் தொடர்கிறது.

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இதுவரையில் உருவாக்கப்படவில்லை

எனினும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக, விசாரணை செய்வதற்கும், சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டனை விதிக்கவும், கடந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அரசாங்கப் படைகளால் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், இணைய முடக்கம், ஊழல் உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகள் தொடர்கின்றன.

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்’என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.