சர்கார் பட பாணியில் இளைஞரை அதிரவைத்த அதிகாரிகள்!!

கோவையில், 'சர்கார்' பட பாணியில் இரண்டு இளைஞர்களின் வாக்குகளைக் கள்ள ஓட்டு போட்டுவிட்டனர்.


கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர், இன்று காலை வாக்களிப்பதற்காக அருகில் உள்ள வாக்குசாவடிக்குச் சென்றிருந்தார். அப்போது, அவரது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் ,அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் அவருக்கு சரியாகப் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேஷ் கூறுகையில், "நான் கடந்த சட்டசபைத் தேர்தலில் வாக்களித்திருந்தேன். தற்போது இரண்டாவது முறையாக வாக்களிக்க இருந்தேன். ஆனால், நான் வருவதற்கு முன்பே எனது வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டார். அதிகாரிகளிடம் கேட்டால், என்னை ஒருமையில் திட்டுகின்றனர். நான் தொடர்ந்து கேட்டதால், "ஏதாவது ஒரு பட்டனை அழுத்திட்டு போ. இல்லாட்டி எங்களுக்கு பிரச்னை ஆகிடும்" என்றனர். எவ்வளவு அலட்சியமாக இருந்தால் இப்படிப் பேசுவார்கள். அதிகாரிகளின் கவனக்குறைவே இதற்கு முழுக் காரணம்" என்றார்.

அதேபோல, ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி, பெங்களூரில் பணியாற்றிவருகிறார். இவர், வாக்களிப்பதற்காக ரயில்மூலம் இன்று கோவை வந்துள்ளார். வாக்களிக்கச் சென்றபோது, அவரது வாக்கும் ஏற்கெனவே செலுத்திவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த இரண்டு விவகாரங்களும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து, இருவரிடமும் வருத்தம் தெரிவித்த ராசாமணி, அவர்கள் தபால் ஓட்டு செலுத்த ஏற்பாடுசெய்தார். மேலும், அதிகாரிகளை கவனத்துடன் பணியாற்றவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.