பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து !!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும்
கத்திக்குத்து பொலிஸாருக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை காரணமின்றி தடுத்து நிறுத்தி விசாரணை செய்யவும் அவர்களது பொதிகளை சோதனையிடவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அண்மைய காலமாக பிரித்தானியாவில் தொடர்ச்சியாக பல கத்திக்குத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.இந்நிலையில், எவ்வித காரணமும் இன்றி மக்களை விசாரிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் இச்சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள உட்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளார்.எனினும், இது மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கை எனவும், போதியளவு தாக்கத்தை செலுத்தாதென்றும்
சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மக்களை எவ்வித காரணமுமின்றி தடுத்துவைத்து விசாரிப்பதானது, கறுப்பின மக்களை இலக்குவைத்ததென கடந்த காலங்களில் விமர்சிக்கப்பட்டது. இதனால், இந்த நடைமுறை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.எனினும், வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், அதற்கு தேவையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் உடதுறை அமைச்சர் கூறியுள்ளார்.இந்த நடைமுறையின் ஆரம்பமாக லண்டன், வெஸ்ட் மிண்ட்லாண்ட், சவுத் யோக்ஷையர், வெஸ்ட் யோக்ஸ்ஷையர், சவுத் வேல்ஸ் மற்றும் கிறேட்டர் மான்செஸ்டர்
ஆகிய பகுதிகளில் 7 பொலிஸ்
படைகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இப்பகுதிகளில் சுமார் 60 வீதமான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

########################

பொலிஸார் மட்டுமே வன்முறைக் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது பிரதமர்..பொலிஸாரின் அதிகாரங்களை அதிகரிப்பதால் மாத்திரமே வன்முறைக் குற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் வன்முறை உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் பேசிய தெரேசா மே கூறியதாவது..இந்த பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பலதுறைகளைச் சேர்ந்தவர்களின் நீண்டகால ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.பொலிஸாரால் மாத்திரமே இந்த பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது.
கடந்த வார இறுதியில் இடம்பெற்ற கடுமையான வன்முறை சம்பவங்கள் உட்பட சமீபத்திய மாதங்களில் பயங்கரமான வன்முறை குற்றங்களின் காரணமாக பல இளைஞர்களின் வாழ்க்கை பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே குற்றங்களை இழைத்தவர்களும் இளைஞர்களாக இருப்பதே மிகவும் கவலையளிக்கிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இரு பகுதிகள் மீதும் கவனம் செலுத்துகின்ற இந்த இளைஞர் வன்முறை உச்சிமாநாடு நூறுக்கும் அதிகமான நிபுணர்களை உள்ளடக்கியிருந்தது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் இளைஞர் வன்முறை தொடர்பான உச்சிமாநாட்டை நடத்துவது மட்டுமின்றி கத்திக்குத்து வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் பிரதமர் தனிப்பட்ட முறையில் சந்திப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.