வரவு செலவு திட்டத்திற்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் –கஜேந்திரன்!!

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 எனினும் அரசிற்கு நெருக்கடிவரும் சமயங்களில் கைகொடுக்கும் கூட்டமைப்பினர், வரவு செலவு திட்டத்திற்கும் ஆதரவாகவே வாக்களிப்பார்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 யாழ். கொக்குவில் பகுதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

 “வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. அந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கின்றனர். ஆனால் அவை அனைத்தும் தேர்தல்கள் நெருங்கி வருகின்றதால் மக்களை ஏமாற்றுவதற்கான நடாகங்களாகவே நாம் பார்க்கின்றோம்.

 வரவு செலவு திட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதென்றால் அத்தகைய வரவு செலவுத் திட்டத்தை ஏன் ஆதரிக்கின்றீர்கள்? எனவே எதிர்த்து வாக்களிப்பதற்கு தயாராக உள்ளீர்களா என்றும் கேட்கின்றோம்.

 அரசிற்கு நெருக்கடி வரும் சமயங்களில் கூட்டமைப்பினர் நிச்சயம் அரசிற்கு ஆதரவாகவே செயற்படுவார்கள். அதற்கமைய வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவே கூட்டமைப்பினர் வாக்களிப்பர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.