மிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020

விகாரி வருட ராசிபலன்கள்  14.4.2019 முதல் 13.4.2020 வரை

 (மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் வரை)

பெயரின் முதல் எழுத்துக்கள் க,கா,கி,கு,ஞ,ச,கே,கோ உள்ளவர்களுக்கு)

ஆண்டின் தொடக்கமே அமர்க்களம்!




மிதுன ராசி நேயர்களே,

விகாரி வருடம் பிறக்கும் பொழுது, உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருக்கின்றார்கள். ஊர்ந்து செல்லும் பாம்பு கிரகங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். அதிசார குரு தனுசு ராசியில் சஞ்சரித்தபடி உங்கள் ராசியை சப்தம பார்வையாகப் பார்க்கின்றது. ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாக அமையப்போகின்றது.



வருடத் தொடக்கநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் கடக ராசியில் பிறக்கின்றது. தன ஸ்தானத்தில் தனாதிபதி சந்திரன் வலுப்பெற்றும், குருவின் பார்வையோடும் இந்த ஆண்டு பிறப்பதால் சென்ற ஆண்டில் நடைபெறாத காரியங்கள் எல்லாம் ஆண்டின் தொடக்கத்திலேயே நடைபெறப் போகின்றது. உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடைபெறத் தொடங்கும்.



தகராறுகள் எல்லாம் தானாக விலகும். கூட்டுத்தொழிலில் கூட்டாளி களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் அகலப் புதிய பாதை புலப்படும். நெருக்கடி நிலை மாறும். நிதி நிலை தேவைப்படும் அளவிற்கு மேலாகவே உங்கள் கரங்களில் புரளும். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவோடு விருப்பப்பட்ட இடத்திற்கு மாறுதல் வாங்கிக் கொண்டு செல்ல வாய்ப்புகள் உருவாகும். 7-ல் சனி இருக்கின்றாரே என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டாம். குருவோடு சில காலங்கள் அவர் கூடியிருப்பதால் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். சுபச் செலவுகளாகவே வந்து கொண்டேயிருக்கும்.



சப்தமாதிபதி குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். “குரு பார்க்கக் கோடி நன்மை” என்பது போல குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். திருமண முயற்சிகள் கைகூடும். சந்தோஷத்தோடு கூடிய சம்பள உயர்வுகள் வந்து சேரும்.

உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்றிருக்கின்றார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெற்றிருப்பது யோகம்தான்.



எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். உதிரி வருமானங்கள் பெருகும். தக்க விதத்தில் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். பங்குதாரர்கள் நல்ல முறையில் பாகப்பிரிவினை களைச் செய்து கொண்டு தாங்களாகவே விலகிச் செல்ல முன்வருவர். இந்த நல்ல நேரத்தில் புதிய பங்குதாரர்கள் உங்களோடு வந்திணைந்து பொருளாதார நிலையை உயர்த்தப் பாடுபடுவர்.





தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)

இக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசியிலும், 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. எனவே தேக நலன், செயல்திறன், மகிழ்ச்சியான மனநிலை, கவுரவம், உடன்பிறப்புகளின் உதவி, வழக்குகள், மூத்த சகோதரர், பணியாளர்கள், தொழிலில் லாபம், கவுரவப்பதவி, முன்னோர் சொத்து, பணப்புழக்கம் ஆகியவற்றில் எல்லாம் குருவின் பார்வை பலத்தால் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது.



‘ஜென்மத்தை குருதான் பார்த்தால் சிரமங்கள் அகன்று ஓடும்’ என்பர். இதுவரை பட்ட துயரங்கள் இனி அகன்று ஓடும். உடல்நிலை சீராகி உற்சாகப்படுத்தும். உறவினர்களின் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும். அரசுவழி உத்தியோக முயற்சி கை கூடும்.



உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கப் போகின்றது. உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சென்ற ஆண்டு உங்களை விட்டுப் பிரிந்து சென்ற பங்குதாரர்கள் தவறை உணர்ந்து மீண்டும் உங்களோடு வந்திணைந்து செயல் புரியத் தொடங்குவர். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். வீட்டை விரிவு செய்து கட்ட வேண்டுமென்று முயற்சித்தவர்களுக்கு அந்த முயற்சி கை கூடும். ஒருசிலர் பழைய வீட்டைப் புதுப்பிக்க நினைப்பர்.



இதுவரை நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கும், உற்றார், உறவினர் களுக்கும் என்னதான் உதவி செய்தாலும் அவர்கள் உரிய விதத்தில் நன்றி காட்டவில்லையே என்று நீங்கள் நினைத்திருக்கலாம். அந்த நிலை இனி அடியோடு மாறப்போகின்றது. பெற்றோர்களின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா, சதாபிஷேக விழா போன்றவற்றைக் கொண்டாட நீங்கள் முன்வருவீர்கள்.



ஆக்கப்பூர்வமான யோசனை களால் தேக்க நிலை அகலும். திறமை மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். ஒத்துவராத பணியாளர்களை ஒதுக்கிவிட்டு புதிய பணியாளர்களை சேர்த்துக்கொள்வீர்கள்.



குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைகூடும். தடம்மாறிச் சென்றவர்கள் தானாக வந்திணையும் நேரமிது. கடைதிறப்புவிழா, கட்டிடத் திறப்புவிழா, போன்றவைகள் நடைபெறும் நேரமிது.



விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)

இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்புக் கைகூடும். குடும்பத்தில் நடைபெற இருக்கும் சுபகாரியத்தை முன்னிட்டு மனையை விரிவுபடுத்திக்கட்டும் முயற்சி அல்லது கட்டியுள்ள மனையைப் பழுதுபார்க்கும் வாய்ப்பும் உருவாகும்.



குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் இதுவரை தொழில் அமையவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு இப்பொழுது தொழில் அமையும். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது படிப்பிற்கேற்ற வேலை மட்டுமல்லாமல், அரசு பணிகளும் கிடைக்கலாம்.



தொழிலை விரிவு செய்ய தொகை போட முடியவில்லையே, யாராவது உதவி செய்வார்களா என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.



குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் பலன் தருவதாக அமையும். உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு விருப்ப ஓய்வில் வெளிவந்து வெளியூரில் தொழில் செய்யலாமா? என்று எண்ணியவர் களுக்கு அது வெற்றிகரமாக நிறைவேறும். வீடுமாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் எதிர்பார்த்த விதம் அமையும். வியாபாரத்தில் புதிய பணியாளர்களை சேர்த்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சி பெருக வழிஅமைத்துக் கொள்வீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.



சனியின் சஞ்சார நிலை

ஆண்டு முழுவதும் சனி பகவான் கண்டகச் சனியாகச் சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியில் வக்ரம் பெறுகின்றார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே ஆரோக்கியத் தொல்லை ஓரளவு உருவாகலாம்.



குடும்பத்தினர்களிடம் குறைகளைப் பேசாமல் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வந்து சேரும். வெளிநாட்டில் உள்ளவர்கள் வேலை கிடைக்காமல் தாய்நாடு திரும்பும் சூழ்நிலைகூட உருவாகலாம். இக்காலத்தில் சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.



ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

உங்கள் ராசியிலேயே ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே பெரிய மனிதர் களின் தொடர்பும், அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். தைரியமும், தன்னம்பிக்கையையும் தக்க வைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்துடன் உல்லாசப் பயணங்கள் செல்லும் முயற்சி கைகூடும். கேதுவின் பலத்தால் விவாகப் பேச்சுக்கள் விரைவில் முடிவடையலாம். வந்து திரும்பிய வரன்கள் கூட மீண்டும் வரலாம். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். குடும்ப ரக சியங்களை வெளியில் சொல்வதால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.



சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)

இக்காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி உங்களுக்குத் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் நண்பர்களை நம்பி ஏமாறும் சூழ்நிலை உண்டு. வழக்குகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. அலைச்சலைக் குறைத்துக்கொள்வதன் மூலம் பிரச்சினை களிலிருந்து விடுபட இயலும்.



பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வை இருப்பதால் நினைத்தது நிறைவேறும். நேசிக்கும் உறவினர்கள் யோசிக்காது வந்து உதவி செய்வர். வங்கிச் சேமிப்பு உயரும். வருமானம் போதுமானதாக இருக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். புகுந்த வீட்டிற்குப் பெருமை சேர்க்கும் நேரமிது. விருச்சிக குருவின் சஞ்சாரத்தின் போது ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படும்.



இடுப்பு, முதுகு, கழுத்துப்பகுதிகளில் வலி ஏற்பட்டு அகலும். வேலை ஆட்களை மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பும் உருவாகும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றங்கள், ஊதிய உயர்வு உண்டு. சொத்துக்கள் வாங்கும் பொழுது வில்லங்கங்கள் பார்த்து வாங்குவது நல்லது. சனியின் வக்ர காலத்தில் உறவினர் பகை உருவாகலாம். பவுர்ணமி வழிபாடும், கிரிவலம் வருவதும் மகத்துவமான பலன் தரும்.



வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு

புதன்கிழமை தோறும் மகாலட்சமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். எட்டுவகை லட்சுமிக்குரிய சமயமாலை படித்து வழிபடுவதன் மூலம் தனவரவு திருப்தி தரும். சந்தோஷமும் வந்து சேரும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.