யாழ் பல்கலைகழக மாணவர்களை இலக்குவைத்து தாக்கும் சில ஊடகங்களின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்!

அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழக விவகாரங்களை உண்மைக்குப்புறம்பான செய்தியாக வெளியிடும் ஒரு சில ஊடகங்களின்  பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்வுகளே இருப்பதாக தெளிவாக அறிய முடிகின்றது . சில அரசியல் கடசிகளையும் அரசியல் புலப்பெயர் தமிழர் அமைப்புகளையும் பின்புலமாக கொண்ட குறித்த ஊடகங்கள் ஊடகவிழுமியங்களையும் மீறி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.



யாழ்பல்கலை கழக மாணவர்களை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் அடிபணிய வைக்க சில அரசியல் கடசிகள் அண்மைக்காலமாக பெரும் பிரயத்தனைகளை மேற்கொண்டுவரும் நிலையில் அதற்குள் சிக்காத மாணவர்கள் தன்னெழுச்சியாக பல தமிழின விடுதலை வேண்டிய போராட்டங்களையும்  பேரணிகளையும் நடாத்திவருகின்றார்கள்.

அந்தவகையில் இந்த எழுச்சியை முடக்கும் நோக்கிலும் தமது அரசியல் வக்கிரத்தை தீர்த்து கொள்ளும் நோக்கிலும் ஒருசில ஊடகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வை திரிவுபடுத்தி பாலியல் சீண்டல்கள் யாழ் பல்கலை கழகத்தில் நடைபெறுவதாக குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டு தமது காழ்ப்புணர்வை வெளியிடுள்ளன.இந்த சம்பவம் முற்றிலும் பொய்யானது என யாழ் பல்கலை கழக மாணவர் ஒன்றியம் தமது நிலைப்பாடடை விளக்கியுள்ளது. மேலும் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது,

அந்த அறிக்கை வருமாறு ,

பகிடிவதை தொடர்பாக

பகிடிவதைகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக எமது நிலைப்பாடு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதால் ஒரு தரப்பினர் மீது சேறு பூசும் நோக்குடன் யாரும் எதையும் குறிப்பிட முடியும். எனினும் ஊடகங்கள் ஊடக தர்மத்தை மீறிய வகையில் குறித்த அவ் தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதனை ஆராயாமல் குறித்த செய்திகளினை வலைப்பக்கங்களும், அச்சு ஊடகங்களும் பிரசுரித்தமை எமக்கு மனவேதனையினை ஏற்படுத்துகின்றது.

தமிழ்த்தேசிய அடக்குமுறைகளிற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதால் தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு தரப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் உருவெடுப்பதனை விரும்பாத தரப்புக்கள் திட்டமிட்ட வகையில் எம்மீது சேறு பூச முயல்வதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சேறு பூசும் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டுக் கொண்டிக்கும் வலைப்பக்கங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்கமாட்டோம்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளிற்கு எதிராக இறுக்கமான சட்ட நடைமுறைகள் உள்ளதால் பகிடிவதைகள் எல்லை மீறிய வகையில் இடம்பெறுகின்ற போது பல்கலைக்கழக நிர்வாகம் முறையான ஒழுக்காற்று விசாரணைகளினை முன்னெடுத்து தண்டனைகள் வழங்கி வருகிறது.

முதலாம் வருட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல்கள் இடம்பெற்றதாக வதந்திகளை பரப்புபவர்களிற்கும், அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் தமது சுயலாபங்களிற்காய் கண்டன அறிக்கைகள் விடுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபடுமளவிற்கு எமது மாணவர்கள் தரங்கெட்டுப்போகவில்லை.

பகிடிவதைகள் என்பதனை தவறான அர்த்தப்படுத்தலுடன் பாலியல் சீண்டல்கள், பாலியல் வக்கிரங்கள், பாலியல் வன்முறைகள் என்றவகையில் தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவது எவ்வளவு தவறானது என்பதை புரிந்து கொள்ளாது ஒருசில ஊடகங்கள் செயற்படுவது ஊடாக தர்மத்தையே இழிவுபடுத்தும் ஒன்றாகவே அமையும் என்பதனையும் மனவேதனையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.

என அந்த அறிகையில் குறிப்பிடப்படுள்ளது . மேலும் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிடட ஊடகங்கள் கடந்த மாதமும் யாழ் பல்கலையின் கிளிநொச்சி  வளாகத்தில் மோசமான பகிடிவத்தையால் மாணவி ஒருவர் பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தனர் , கடந்த மாதம் யாழ் பல்கலை கழகத்தால் தமிழின படுகொலைக்கு நீதிகோரி மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்ற அதே நாட்களில் இன  படுகொலைக்கு நீதிகோரும் யாழ்பல்கலை கழகம் பல்கலை கழகத்தில் நடக்கும் படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்குமா ?? என்ற தலைப்பில் இந்த  பொய் செய்தியை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.