கூடங்குளம் பிரச்னைகள் இந்திய அரசு விரிவாக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும்-வைகோ அறிக்கை!!

கூடங்குளம் அணுஉலையில் பிரச்னைகள் உள்ளதை ஒப்புக் கொண்டது இந்திய அரசு விரிவாக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும்
சுதந்திரமான குழுவைக் கொண்டு அணுஉலை செயல்பாடுகளை ஆராய வேண்டும் என வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கூடங்குளம் அணுஉலையானது செயல்படத் துவங்கும் முன்னரே அந்த அணுஉலையை அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ச்சி செய்து அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை அறிந்த காரணத்தினால் தான் அந்த உலையை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இடிந்தகரை கிராமத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும் நீண்டகாலமாக இரண்டு அணு உலைகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

அணுஉலை செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இந்திய அணுசக்திக் கழகத்தினரும், அணுசக்தித் துறை வல்லுநர்களும் மறுத்து வந்தனர். ஆனால் ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்ட தகவலின்படி, கூடங்குளம் அணு உலை அலகு 1, 2013ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 47 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அணு உலை அலகு 2, 2017 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 19 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் நமக்கு கிடைத்தது. சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு உலையானது ஆண்டிற்கு 2 அல்லது 3 முறைதான் பராமரிப்பிற்காக மட்டும் நிறுத்தப்படும். இதன் மூலமாகவே கூடங்குளம் அணுஉலையில் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலாளருமான கமலேஷ் நில்கந்த் வியாஸ் கூறுகையில், “கூடங்குளம் அணு உலை அடிக்கடி நிறுத்தப்படும் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானது. அந்த உலையில் தொடக்க நிலை பிரச்சனைகள் உள்ளது அதை சரிசெய்ய இந்திய அணுமின்சக்தி கழகத்தினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் போராட்டக்காரர்களும், இடிந்தகரை மக்களும் நீண்டகாலமாக முன்வைத்துவரும் குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது.

அணுசக்தி கழகத்தின் செயலாளர் கூறியதை கருத்தில் கொண்டு இனியாவது கூடங்குளம் அணு உலை அலகு 1 மற்றும் 2ன் செயல்பாடுகளை ஒரு சுதந்திரமான வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை கூடங்குளத்தில் மேற்கொண்டு புதிய உலைகள் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மேலும் அணுஉலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மாநில அரசின் கைகளில் உள்ள காரணத்தால் இப்பிரச்சனைக்கு முழுக் கவனம் அளித்து உடனடியாக கூடங்குளத்தில் அணுஉலை செயல்பாடுகள் அனைத்தையும் மாநில அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
 மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
21.04.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.